Friday, May 29, 2009

இரண்டு டீயும், ஒரு பாலும்.....

நேற்று மாலை தேனீர் சாப்பிடுவதற்காக அலுவலகத்துக்கு கீழ் உள்ள கேண்டீனுக்கு என் நண்பருடன் வந்திருந்தேன்....செல்ப் சர்வீஸ் ஆனதால் டோக்கன் எடுத்து விட்டு, டீ வினியோகம் செய்யும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம்...

சற்றே உடல் பருத்த 25 வயது இளைஞி ஒருத்தி, வேகமாக பலகாரங்கள் வினியோகம் செய்யும் இடத்துக்கு வந்தாள். வந்த வேகத்தில் பலகாரம் வினியோகம் செய்யும் சிப்பந்தியை பார்த்து கத்த துவங்கினாள்..

"என்ன சார் சமோசா போடுறீங்க இங்க பாருங்க சமோசால பூச்சி இருக்கு". சிப்பந்தியோடு சேர்ந்து நாங்களும் எட்டி பார்த்தோம். தட்டில் இரண்டு கறிவேப்பிலையும் ஒரு சிறு 8 கால் பூச்சியும் கிடந்தது... "இந்த பூச்சிக்கு பதில் வேற ஏதும் கிடந்தா என்ன பண்ணுவீங்க" என அந்த பெண் கேட்டது சற்று எதார்த்தமாகவும், சற்று பரிதாபமாகவும் இருந்தது.

சிப்பந்தி அந்த பெண்மணியை சமாதானம் செய்வதில் முழு மூச்சாய் இருந்தார் " ஸாரி மேடம் இனி இந்த மாதிரி தப்பு எல்லாம் நடக்காது மேடம் " என்றதுக்கும் அந்த பெண் சமாதானம் ஆகவில்லை. "ப்ளீஸ் மேடம் இந்த சமோசாவுக்கு பதில் வேணுமின்னா இன்னும் 2 சமோசா தரேன் மேடம்" என்றதுக்கும் "அது எல்லாம் வேண்டாம், இனியாவது சமைக்கும் போது ஒழுங்கா சமையுங்க என்று சொல்லி அந்த பெண் திரும்பி நடந்தது சற்று கம்பீரமாகவே இருந்தது.....

ஐந்து அடி தூரம் அந்த பெண் நடந்திருப்பாள் சடாரென திரும்பி சிப்பந்தி அருகில் வந்து "சரி சரி இந்த சமோசாவிற்கு பதில், இரண்டு டீயும் ஒரு பாலும் கொடுங்க" என்று சொன்னதும் அந்த சிப்பந்தி உட்பட எங்கள் முகங்களில் புன்னகை வழிந்து ஓடியதை எங்களால் தவிர்க்க இயலவில்லை.... அந்த பெண் சமோசா சாப்பிட்டு வைத்து போன தட்டில் இருந்த இரண்டு கருவேப்பிலையும் காற்றில் அசைந்து ஆடி தங்களுக்குள் சிரித்து கொண்டிருந்தது போல் இருந்தது எனக்கு....

Thursday, May 28, 2009

யாரிடம் சொல்ல........

பகிர்தல் அற்ற 
வெறுமையின் இரவில்
தனிமையாய்
அழுது கொள்கிறேன்...

யாரிடம் சொல்வேன்
நீ என்னை
களவாடி போன பொழுதை.....

Tuesday, May 26, 2009

எப்போது தொலைத்தோம் ???

நீ இல்லாத
பரிச்சயம் அற்ற பொழுதுகள்
போக மறுக்கிறது என்னை விட்டு...

பத்திர படுத்தாமலே
தீர்ந்து போய் கொண்டு இருக்கின்றன
உனக்கான வார்த்தைகள்

செல்லும் வழி யாவும்
பிரிந்தே விடுகிறது
ஏதோ ஒரு கணத்தில்...

வாட்டும் கொடும் குளிரிலும்
வெப்ப பிசுபுசுப்பையே
தருகிறது ஒவ்வரு
தனிமையின் இரவும்....

நமக்கான ஆசைகள் அனைத்தையும்
குத்தகைக்கு எடுத்து,
நிராசையாக்கி தவணை முறையில்
துப்புகிறது கடக்கும்
அத்தனை மணி துளியும்...

ஞாபகம் இருக்கிறதா
எப்போது தொலைத்தோம்
உனக்கான என்னையும்
எனக்கான உன்னையும்..........