Sunday, September 19, 2010

'அதிகாலை' குறும்படம் வெளியீட்டு விழா

ஆண்டனியை அவருடைய இரண்டாம் பிறவியில் தான் முதல் முதலாக சந்தித்தேன்... ஒரு உதவி இயக்குனருக்கே உண்டான ஆழ்ந்த வாசிப்பு ஞானம்,பேச்சில் முதிர்ச்சி, நிகழ்வுகளை அற்புதமாக விவரிக்கும் திறன் என அந்த சந்திப்பிலேயே நிறைய ஆச்சரியங்களை எனக்கு அளித்தார்.தமிழர் நலன் குறித்த அவர் பார்வையும், அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

விபத்து அவருடைய ஒரு கரத்தை பறித்து கொண்டதை தவிர்த்து அவருடைய போராட்ட குணம், கொள்கையில் நேர்மை, விடா முயற்சி என எல்லாவற்றிலும் கனக்கச்சிதமாகவே இருக்கிறார்.

ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் ஆவது என்ற லட்சியத்தை நோக்கி இரண்டாம் படியை எடுத்து வைத்துள்ளார். ஆம்....... எந்த விபத்து அவர் ஓடுவதை சற்று தடுத்து நிறுத்தியதோ, அதே விபத்தை மையப்பொருளாக கொண்டு தனது இரண்டாம் குறும்படத்தை வெளியிட உள்ளார்.

பெரும் போராட்டங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் 24 செப்டம்பர் 2010 அன்று காலை பத்து மணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வைத்து வெளியிடப்பட உள்ளது. சமூக ஆர்வலர்கள், திரைத்துறை மற்றும் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

ஆண்டனியுடைய முதல் குறும்படம் இருள் மக்கள் தொலைக்காட்சியில் பரிசு பெற்றது போல, இந்த 'அதிகாலை' என்ற குறும்படமும் பல விருதுகளை பெற வாழ்த்துவோம்.





ஆண்டனி பற்றி 'ஆனந்த விகடன்'(04-08-2010) வார இதழில் வெளிவந்த சிறப்பு கட்டுரை கீழே........

ஆண்டனியால் அது முடியும்!

"மனசு வலிக்குது சார்" என்கிறார் ஆண்டனி ராஜ். நான் அவரைப் பார்க்கிறேன்

அவருக்கு வலது கை இல்லை. கை இருந்த இடத்தில் ஒரு துண்டு போர்த்தியிருக்கிறது. இல்லாத கை அவருக்கு வலியைத் தந்துகொண்டே இருக்கிறது. ஆண்டனி பேசிக்கொண்டே இருக்கிறார்.

"நல்லதா ஒரு சினிமா எடுக்கணும். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது மட்டும்தான் சார் என்னோட ஆசை. ஓர் இடத்தில் இருக்காம துறுதுறுன்னு பயங்கர சேட்டை பண்ணுவேன். என்னைச் சமாளிக்க முடியாம பாண்டிச்சேரியில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுட்டாங்க. ப்ளஸ் டூ வரைக்கும் அங்கதான் படிச்சேன். நாடகம், கவிதைன்னு ஆர்வம். அதுக்குப் பிறகு, சென்னை வந்து லயோலாவில் தமிழ் படிச்சேன்.

கல்லூரி முடிச்சு வெளியில் வந்ததும் சினிமாவுக்குள் நுழையப் பெரிய போராட்டம். கையில ஒரு பைக் இருந்துச்சு. அதை வெச்சுக்கிட்டு தினமும் ரவுண்ட் அடிக்கிறது. எப்படியாச்சும், யார்கிட்டேயாவது சேர்ந்துட முடியாதான்னு இருக்கும். படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாத எத்தனையோ இயக்குநர்களின் கதைகளில் வேலை பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமா பிடிபட ஆரம்பிச்சுது. ஜான் மகேந்திரன் சார் அறிமுகம் கிடைச்சு, அவருடன் வேலை பண்ணேன். அவர் மூலமா லக்ஷ்மிகாந்தன் சார் அறிமுகம் ஏற்பட்டு, அவரோட 'டாக்ஸி' படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.

இதுக்கு இடையில் 'இருள்'னு ஒரு குறும்படம் பண்ணேன். மக்கள் டி.வியில் அப்போதான் குறும்படப் போட்டி ஆரம்பிச்சிருந்தாங்க. அதில் 'இருள்' இரண்டாவது பரிசு வாங்கியது. வசதி குறைவான குடும்பப் பின்னணி என்னோடது. ஆனால், எதுக்காகவும் எப்பவும் நான் கவலைப்பட்டது இல்லை... கலங்கி நின்னது இல்லை. நினைச்சதை செஞ்சு பார்த்துடணும்னு குறியா இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் என்னோட மிக நெருங்கிய நண்பன் தமிழ்ச்செல்வன் ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்" கொஞ்சம் நிறுத்தித் தொடர்கிறார்...

"தமிழ்ச்செல்வன் எனக்கு ரொம்ப நெருக்கம். படுத்த படுக்கையாக் கிடந்த அவனைப் பார்க்கப் போனேன். ஆனால், என்னை அவனுக்கு அடையாளம் தெரியலை. அவன் நினைவுகள் மாறிப்போயிருந்துச்சு. விபத்து என்பது எவ்வளவு கொடூரமானதுன்னு அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன். சம்பந்தமே இல்லாம சாலையில் போயிட்டு இருக்கிற ஒருத்தரை ஒரு வாகனம் அடிச்சுத் தள்ளிட்டுப் போயிடுது. ஆனா, அடிபட்டவனுக்கு ஒரு குடும்பம், வாழ்க்கை, பொறுப்புகள், எதிர்காலம்... எவ்வளவு இருக்கு? விபத்தை வேடிக்கை பார்க்குற மக்கள் 'பாவம்'னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. அந்தப் 'பாவம்' எந்தவிதத்துலயும் உதவப் போறது இல்லை. உடனடியா விபத்தைப்பற்றி ஒரு குறும்படம் எடுக்க முயற்சி பண்ணேன்.

பேப்பர்ல வந்த செய்திகள், உலகத்தில் என்னென்ன வகையான விபத்துக்கள் நடக்குது... எல்லாத்தையும் சேகரிச்சேன். விபத்து தொடர்பான விதவிதமான வீடியோக்களைச் சேகரிச்சுப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் பாண்டிச்சேரியில் இருந்து என் நண்பன் ஒருவன் வந்திருந்தான். அவனைப் பார்த்துட்டு சும்மா அவன்கூட பாண்டிச்சேரிக்குப் போயிட்டு வருவோம்னு கிளம்பினேன். விபத்துபற்றிய சில படங்களை ரெஃபரன்ஸுக்காக வாங்கிட்டு பஸ்ல திரும்பிட்டு இருந்தேன். பாண்டிச்சேரியில் இருந்து பஸ் வெளியே வந்துச்சு. ஈ.சி.ஆர். ரோடு. வேகமா ஓட்டிட்டு இருந்தார் டிரைவர். நான் டிரைவர் ஸீட்டுக்குப் பின் பக்கமா நாலாவது வரிசையில் ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு எதிர்ல ஒரு பஸ் தாறுமாறா பயங்கர வேகமா வருது. எங்க பஸ் டிரைவர் பஸ்ஸை ஒடிச்சுத் திருப்பினார். நேருக்கு நேரா மோதியிருக்க வேண்டிய அந்த பஸ், நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமா படார்னு மோதி அந்தப் பக்கத்தையே நொறுக்கிடுச்சு.

என்னோட வலது கை ஜன்னலுக்கு வெளியே தோள்பட்டையில் இருந்து தனியா தொங்கிட்டு இருக்கு. எனக்குச் சில நிமிடங்களுக்கு எந்த வலியும் தெரியலை. சொதசொதன்னு ரத்தம் கொட்டுது. ஆனா, மயக்கம் இல்லை. எனக்கு முன்னாலயும் பின்னாலயும் உட்கார்ந்திருந்த எல்லோருக்குமே என்னை மாதிரி கொடூரமான அடி. ஒரே சத்தம். எனக்கும் உயிரை எடுக்குற கொடூர வலி. 'ஐயோ, அம்மா'ன்னு கத்துறேன். அந்த இடத்தில் யாரும் இல்லை. எங்களை மோதின வண்டி நிக்காமப் போயிடுச்சு. டிரைவரும் கண்டக்டரும் அந்த வண்டியைப் பிடிக்கக் கிளம்பிப்போயிட்டாங்க. என் கை தோள் பட்டையில் இருந்து தொங்கிட்டு இருக்கு. ஆஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போக ஒரு வண்டி வந்து நிக்குது. தொங்கிட்டு இருந்த கையை எடுத்து மடியில் வெச்சுக்கிட்டு உட்கார்ந்தேன். பாண்டிச்சேரி பி.ஐ.எம்.சி. அரசு மருத்துவமனை. இரவு 11 மணிக்கு அடிபட்ட நாங்க எல்லோரும் போனபோது பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தாங்க. அப்போதைக்கு எங்க வலியைக் குறைக்க மருந்து கொடுத்துட்டு, 'காலையில் பெரிய டாக்டர் வருவார்'னு சொல்லிட்டாங்க. தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழியத் தொங்கிட்டு இருந்த கையைப் பார்த்தேன். வாழ்க்கை முழுக்க இனிமே எனக்கு வலது கை கிடையாதுன்னு அப்பவே எனக்குப் புரிஞ்சுபோச்சு. வலது கையை எடுத்துட்டாங்க. பிறகு பார்த்த டாக்டர்கள் 'உடனே ஆபரேஷன் பண்ணியிருந்தா கையை ஒட்ட வெச்சிருக்கலாமே'ன்னு சொன்னாங்க. யாரைக் குற்றம் சொல்றது? எல்லாம் முடிஞ்சுபோச்சு.

ரெண்டு மாசம். அந்தப் புது வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவாலா இருந்துச்சு. 26 வயசுல புதுசா பொறந்தது மாதிரி ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டேன். சினிமாவில் கையெழுத்து அழகா இருக்குற அசிஸ்டென்ட்டை ஸ்க்ரிப்ட் காப்பி பண்ணச் சொல்லுவாங்க. என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும். அது போச்சு. நோட்டும் பென்சிலும் வாங்கி வெச்சுக்கிட்டு இடது கையால் எழுதப் பழகினேன். ஒரு கையால் துணி போட்டுக்க, ஒரு கையால் தலைவாரிக்க... எல்லாத்துக்கும் பழகினேன். மறுபடியும் பழைய ஸ்க்ரிப்ட்டை எடுத்து விபத்துபற்றிய அந்தக் குறும்படத்தை நண்பர்களின் பொருள் உதவியோடு பண்ணி முடிச்சேன்" என்று டி.வி.டியைக் கையில் தருகிறார். 'அதிகாலை' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் குறும்படம் இரண்டு விபத்துக்களைப்பற்றி விவரிக்கிறது.

"குடிச்சுட்டு வண்டி ஓட்டுறது, வேகமா ஓட்டுறது... இது எல்லாத்தையும் தாண்டி, மன உளைச்சலோடு வண்டி ஓட்டுறதுதான் உலகம் முழுக்கப் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணம். ஒரு தனி மனிதனுக்கு ஏன் மன உளைச்சல் வருது? அலுவலக உயர் அதிகாரிகள், பொருளாதாரப் பிரச்னை... இப்படி சமூகத்தால்தான் தனி மனிதனுக்குப் பிரச்னைகள். அதனால் விபத்து என்பது ஓட்டுறவருக்கும் மோதுறவருக்கும் இடையில் நடக்குற ஒரு சம்பவம் மட்டுமே இல்லை. அதில் நாம் எல்லோருமே சம்பந்தப்பட்டு இருக்கோம். இதை அழுத்திச் சொல்லணும்னு ஆசைப்பட்டுதான் இந்தக் குறும்படத்தை எடுத்தேன். எனக்கு ஒரு சினிமா இயக்குநர் ஆகணும். அதுதான் ஆசையும் லட்சியமும். என் எதிர்கால வாழ்க்கைப் போராட்டம் முழுக்க அதை நோக்கித்தான் இருக்கும்" கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் அமர்ந்தபடி பெரும் கனவுகளுடன் பேசுகிறார் ஆண்டனிராஜ். அதை அடையும் வல்லமை ஆண்டனிக்கு உண்டு!

Saturday, September 4, 2010

நேற்று நண்பன்... இன்று குழந்தை...... நாளை ?

நண்பர் காட்வினை பற்றிய முதல் பதிவுக்கு இங்கே செல்லவும்
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html


அறுவைசிகிட்சையும், முதுகுத்தண்டில் ஒன்றிரண்டு கம்பிகளை தவிர எப்படி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்களோ , அதை போலவே ஏறக்குறைய ஒரு மாத மருத்துவமனை வனவாசத்திற்கு பின் வீடு திரும்பி இருக்கிறான் காட்வின். பேசவும், கை அசைக்கவும் முடிகிறது என்பதை தாண்டி இடுப்புக்கு கீழே எந்த அசைவும் இல்லாமல் படுத்து கிடைக்கிறான்.

இயற்கை உபாதைகள் அவனை அறியாமலே தன்னிச்சையாக வெளியேறுகின்றன.ஒரு குழந்தையை போல, எப்போதும் அவனோடு ஒருவர் இருந்தே கவனித்து கொள்ள வேண்டிய சூழல் என ஒவ்வொரு கணமும் கொடுமையாகவே நகர்கின்றது காட்வினுக்கு.

மருத்துவர்களிடம் இது பற்றி கேட்டால் 'இரண்டு மாதத்திலும் சரியாகலாம், இரண்டு வருடத்திலும் சரியாகலாம்' என கடவுளை நோக்கி கை காட்டி விடுகின்றனர்.

பெரும் கனவுகளோடு உற்சாகமாக வலம் வந்த காட்வின், சிதைந்த உடலோடு 'எப்படியும் சீக்கிரம் சரியாகி விடும், தொழிலை சீக்கிரம் ஆரம்பிப்பேன்' என்ற நம்பிக்கையோடே பேச ஆரம்பிக்கிறான்.'கொஞ்சம் உக்கார முடிஞ்சுதுன்னா வீட்ல இருந்தே சேனல ஆப்பரேட் பண்ண முடியும். ஆனா, கொஞ்சம் சாதனங்கள் வாங்கணும், மார்கட்டிங்க்கு ஆளு பார்க்கணும், விளம்பரங்களை சூட் பண்றதுக்கு ஆள் பார்க்கணும் ' என சொல்லும் போதே தன்னால் எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தெறிக்கிறது.

கண்டிப்பாக உனக்கு உடல் நிலை சரியாகும், மறுபடியும் அலுவலகத்துக்கு போய் தொழிலை கவனிப்பாய் என நாங்கள் அவனை ஆறுதல் படுத்தினாலும் கடந்த ஒரு மாதத்தில் மற்ற உள்ளூர் சேனல்களில் என்னென்ன புது நிகழ்ச்சிகள் வந்திருகின்றது, தொழில் நுட்பம் என்னென்ன என்பதை கவனிப்பதிலே தான் அவனுடைய கவனம் செல்கிறது.

பணமும், சூழலும் மட்டும் சரியாக அமைந்த்திருந்தால் எத்தனையோ வெற்றிகளை கடந்து போய் இருக்க வேண்டிய ஒரு தொழில்நுட்ப வல்லுனன் கட்டிலிலே நாளைய நாட்களை பற்றிய கனவுகளிலே கழிப்பதை காணும் போது மனம் பெரிதும் துயருறுகிறது.


ஏறக்குறைய அரை நாளை அவனோடு செலவழித்து கிளம்பும் போது எப்போதுமே வருத்தப்படாத அவனுடைய கண்களில் விழிநீர் வழிந்தோடி விடை சொல்கிறது எங்கள் மூவருக்கும்.இப்போதைக்கு காட்வின் பேசுகிறான் என்பது மட்டுமே நாளை அவனை குறித்த எங்கள் நம்பிக்கைக்கு மிச்சம் இருக்கிறது......

காட்வினுடைய வாழ்வையும், கனவையும் தக்க வைத்து கொள்ள உங்களால் உதவ முடியும் எனில் உதவுங்கள்.
அவருடைய சகோதரருடைய வங்கி விவரம்
----------------------------------------------
Name: MARTIN JOSE G
Account No : 00041050461930
Bank : HDFC
Branch: ITC CENTRE, CHENNAI
IFSC NO: HDFC0000004
In Remarks please specify "SAVE GODWIN"
----------------------------------------------

மேலதிக விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் 9710421045