Thursday, August 5, 2010

நொடியில் நொறுங்கியவனுக்காக.......


ஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவில் காய்ந்த சருகு போல் கிடந்தான் 'Gaadi' என்று எங்களால் செல்லமாய் அழைக்கப்படும் காட்வின் ஜெயபால்.


மருத்துவர்களும், தாதியர்களும் புடைசூழ தூக்குப் படுக்கையில் கிடத்தி அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது தான் நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம்.. ஆவேசத்துடன் கையை பிடித்து 'Gaadi' என்றேன் அதே புன்னகை உதிர்த்தான் வலது புறமாக நின்ற என்னையும், ஹமில்டனையும் பார்த்து...

முதுகெலும்பு உடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான அறுவை சிகீட்ச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இப்படி சிரிக்க முடியுமா என்ற கேள்வி அழுகையையே தந்தது...


கட்வினுக்கும் எங்களுக்குமான நட்பு அபூர்வமானது.... கல்லூரியில் தான் முதல் முதலாக சந்தித்தேன்... என்னை விட ஒரு வருடம் சீனியர் ... .ஏறக்குறைய பத்து வருடங்கள் கழிந்த பின்பும் இன்றும் அதே வீச்சுடன் தொடர்கிறது எங்கள் நட்பு... எங்கள் வாழ்வின் துயரமான பொழுதுகளில் கூடே இருந்து ஆறுதல் அளித்தவன், மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டவன் இன்று எழவே இயலாத நிலையில் வீழ்ந்து கிடக்கும் போது சொல்லணா துயரத்தையே தருகிறது..

பட்டய படிப்பில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீத மதிப்பெண் எடுத்தும் குடும்ப சூழ்நிலைகளால் மேல்படிப்புகள் படிக்க இயலாமல் 900 ரூபாய் சம்பளத்தில் உள்ளூரிலே ஒரு மின்னணுவியல் கடைக்கு வேலைக்கு போக துவங்கினான். விவசாயான தந்தை உடல் நலத்தில் குன்ற அக்கா, இரண்டு தம்பிகள் ஒரு தங்கை என முழு குடும்பத்தையும் இவன் தாங்க வேண்டியது ஆயிற்று... வீட்டிலே சொந்தமாக தொழிலை துவங்கி பின் கலை சார்ந்த ஆர்வம் அதிகமாக உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தான்..

ஏறக்குறைய ஆறு வருட அனுபவம் கிடைத்த பின்பு தன்னிடம் இருந்த சேமிப்புகளையும், தங்கையின் திருமணத்திருக்கு இருந்த நகைகளையும் வைத்து சொந்தமாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்தான்... தற்போது துவங்கிய தொழில் ஆகையால் வேலைக்கு யாரையும் அமர்த்தி கொள்ளாமல் அலுவலகமே கதியென கிடப்பான்.. நல்ல தரமான நிகழ்ச்சிகளை வழங்கி, சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தவனின் வாழ்கையில் வந்தது அந்த கருப்பு தினம் .

ஜூலை 31 அதிகாலை மூன்று மணிக்கு, மறுநாள் காலை வரை போட வேண்டிய நிகழ்ச்சிகளை கணிப்பொறியில் அமைத்து வைத்து விட்டு அசதியோடே இரண்டாம் மாடியில் இருந்த அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி இருக்கிறான்..கேபிள் ஒயர் ஒன்று அறுந்து கிடப்பது தெரியாமல் வேகமாய் நடக்க, தடுக்கி இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கிறான்.


மயங்கி கீழே கிடக்க அதிகாலை ஆனதால் யாரும் கவனிக்காமல் காலையில் தான் அக்கம்பக்கத்தினர் பக்கத்தினர் பார்த்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருகின்றனர். அவர்களும் ஆரம்ப கட்ட சிகிச்சைகளை கொடுத்து விட்டு கையை விரித்து விட்டனர்... அனந்தபுரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபின்பும் இடுப்புக்கு கீழே எந்த உணர்ச்சியும் இல்லாமல் படுத்து கிடக்கிறான்.


ஒரே பருவத்து நண்பர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்ளும் போதும் 'Gaadi உனக்கு எப்போ கல்யாணம்' என்று கேட்டால் தனது தங்கையின் திருமணத்திற்கு அப்புறமே தன் திருமணம் என கூறுவான்... ஒரு குடும்பத்தையே தன் உழைப்பால் தாங்கி வந்த நண்பன் 'ஒண்ணுக்கு போறது கூட தெரியமாட்டேங்குது, இடுப்புக்கு கீழ உணர்ச்சியே இல்ல' என தெக்கி தெக்கி சொல்லும் போது உள்ளமே உடைந்து விடுகிறது.


அவனை தவிர யாருக்குமே அந்த சானலை இயக்க தெரியாததால் அடுத்த நாளே தொடர்பு அற்று கிடக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என உதவினாலும் சாமாளிக்கவே முடியாத பொருளாதார சூழ்நிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறது அவனது குடும்பம். உங்கள் பிராத்தனைகளோடே உங்களால் முடிந்த சிறு உதவியை செய்ய உங்களை இறைஞ்சுகிறோம்.....

காட்வினுக்கு உதவ... அவனுடைய வங்கி கணக்கு விவரம்
----------------------------------------------------------------------------
Name: GODWIN JAYAPAUL G
Account No : 30790782902
Bank : STATE BANK OF INDIA
Branch: KAPPIARAI
IFSC NO:SBIN0007994
Contact No: 9789874197 ( Martin - His Brother)
---------------------------------------------------------------------------------

பதிவுலக நண்பர்களும், மின்னஞ்சல் குழும நண்பர்களும் முடிந்த அளவு இந்த கடிதத்தை குழுமங்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி எங்கள் ஏழை நண்பனுக்கு வாழ்வளிக்க கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
ஸ்டாலின், ஹமில்டன், பிரதீப்


தொடர்புடைய பதிவு