Saturday, December 28, 2013

டி.ஆரும் இன்றைய தலைப்பு செய்தியும்

சந்தேகமே இல்லாமல் தமிழர்களுக்கு சினிமாத் துறை வழியாக கிடைத்த ஆளுமைகளில் ஒருவர் டி.ராஜேந்தர்.. மொழு மொழு கன்னங்களோடு ஹீரோக்கள் வலம்வந்த காலகட்டத்தில் அரை தாடியோடும், தனக்கான பிரத்யேக உடல்மொழி மற்றும் வசனங்களோடு சாமானிய தமிழர்களுக்குள் டி.ஆர் ஊடுருவி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல்  ஆயிற்று...கொஞ்சம் யோசித்து பாருங்கள், தமிழ்நாட்டில் அடுக்குமொழி என்றால் உங்களுக்கு யார் நினைவுக்கு வருவார்கள் என்பதை?!!?

'இளமையில் வறுமை கொடிது' என்பார்கள்; சிறுவயதில் இருந்தே வறுமையில் உழன்று, தன் முயற்சியால் பட்டம் படித்து, உச்சத்தை தொட்டதாலோ என்னவோ டி.ஆருக்கு எப்பவுமே 'தான்' என்ற அகங்காரம் கூடவே இருந்துவந்துள்ளது.. ஒருவகையில் அவரது பலமும், பலவீனமும் அவரது வாய் தான்...

உலகமயமாக்கலின் தாக்கத்தில் காணாமல் போனதில் டி.ஆரும் ஒருவர். உலகின் போக்கை, மக்களின் ரசிப்புத் தன்மையைப் பற்றி உணராது, தன்னை பற்றிய மிகை பிம்பத்தை தானே கட்டமைத்துக் கொண்டதின் விளைவு தான் இன்று சமூக வலைத்தளங்களிலும், அச்சு மற்றும் காட்சி ஊடங்களிலும் அவர் சராமாரியாக கிண்டலடிக்கப்படுவது.ஆனால், கண்டிப்பாக அவர் தமிழ்சூழலில் நிராகரிக்கப்பட வேண்டியவர்அல்ல.. நான் இங்கே அவரை ஆதரிக்க\விரும்ப அவர் ஒரு 'தமிழுணர்வுள்ள தமிழன் ' என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது...

ஸ்டாலின் இளைஞரணி தலைவரான போது 'அப்போ நாங்க என்ன கிழவன் அணியா?' என்று கேட்ட துணிச்சல் இன்றும் மறக்க இயலாதது. 1996 தேர்தலில் ரஜினி தொலைகாட்சி வழியாக ஆதரவு தெரிவித்து ஒதுங்க, டி.ஆர். தமிழகத்தின் ஓவ்வொரு கிராமத்தின் மூலைமுடுக்கிலும் சென்று ஜெயாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்; 1998,2001 என்று அது தொடரவே செய்தது.

ஆனாலும், தன்னை பற்றிய அவரே உருவாக்கி கொண்ட மிகைபிம்பம் திமுகவில் கலைஞரை தவிர வேறு யாரையும் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைக்கு அவரை கொண்டுச் செல்லவில்லை; ஏறக்குறைய வைகோ அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை போல்..இதில் தான் திமுகவில் இருந்து வெளியேறுவதும், உள்ளே நுழைவதுமாக அவர் அரசியலை பகையாக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது..

ஓட்டரசியலில் ஏறக்குறைய கையறு நிலையில் இருக்கும் திமுகவுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல்; ஏறக்குறைய கலைஞர் தனது ஒட்டு மொத்த வீரியத்துடன் போராடும் இறுதி நாடளுமன்ற தேர்தல். இந்தியாவின் நவீன போக்கும், தமிழகத்தின் மாற்று அரசியலும் வேறு திசையில் செல்வதை அவதானித்த திமுக தனது தொண்டர்களை, பேச்சாளர்களை, முன்னாள்களை தக்கவைக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.  திமுக அவருக்கு எம்.பி சீட் தரும் என்று உள்ளும், வெளியிலும் பேசிக்கொண்டாலும், டி.ஆர் எம்.பி ஆனாலும் 'தான்' என்ற ஆளுமை குணம் திமுகவில் கலைஞரை தவிர வேறு யாரையும் தலைமையாக ஏற்றுக்கொள்ள போவதில்லை.. ஏறக்குறைய கலைஞருக்கு பிறகான ஜமீன்தாரி திமுகவும் இவருக்கு ஈடு கொடுக்கப்போவதில்லை..

2014 க்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகாத நிலையில்,  டி.ஆரின் நிலைமை என்பது உண்மையில் சங்கடகரமானது; ஆனாலும், டி.ஆரை அரசியலில் நெடுநாட்களாக அவதானித்தவன் என்ற நிலையில் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள தோன்றுகிறது "அன்பு டி.ஆர். சார், அரசியலில் உங்கள் கடைசி ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. "

Tuesday, October 29, 2013

நினைவுகளிலிருந்து அழியாத ஒரு வரலாற்று துயரம் : வெள்ளியோடு பேருந்து எரிப்பு சம்பவம்


மதம் மற்றும் சாதியின் பின்னால் ஒளிந்து நின்று அரசியல் பேசும் இன்றைய குமரிமாவட்ட காங்கிரஸ் தலைமுறைக்கு ஞாபகப்படுத்த இதை பதிவு செய்யவேண்டியது கட்டாயமாகிறது....
சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் கட்சி முதன் முதலாக மொராஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் கூட்டணியினரிடம் வீழ்கின்றனர். ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளில் பேரில் இந்திராகாந்தியை கைது செய்கின்றார். முதன்முதலாக காங்கிரசின் வீழ்ச்சியையும், இந்திராவின் கைதையும் சகித்துக் கொள்ள இயலாத இந்திரா காங்கிரஸ் தொ(கு)ண்டர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர்.
டிசம்பர் 20, 1978 இரவு, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த 'கட்டபொம்மன் போக்குவரத்து கழக பேருந்து' ஒன்று வெள்ளியோடு அருகே இரவு வழிமறிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்படுகிறது. மூன்று பெண்கள்(ஒரு கர்ப்பிணி பெண்) உட்பட ஒன்பது ஏழை உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், ஏழு பேர் அதே பேருந்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழகின்றனர். இதில் மூன்று உடல்களை(எலும்புகளை) யார் என்றே உறவினர்களால் அடையாளம் காட்டமுடியாத நிலையில், போலீசாராலேயே பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் சூத்திரவாதியாக கருதப்பட்ட, இன்றளவும் 'தீக்கொழுத்தி' என்று மக்களால் வன்மத்தோடு விளிக்கப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். வழக்கு நடைபெற்று வந்த வேளையில் மொராஜி தேசாய் அரசு கவிழ்ந்து மீண்டும் இந்திரா ஆட்சியை பிடிக்கிறார் மத்திய, மாநில அரசின் உறவுநிலை பின் நெருக்கமாக இந்த தீக்கொழுத்தியோ வெளியே வருகிறார். கட்சி இவருக்கான 'சேவை'யை பாராட்டி 1989-ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக்குகிறது. நல்லவேளையாக அந்த கரும்புள்ளியை தனது முதுகில் வாங்கிக்கொள்ள விரும்பாத பத்மனாபுரம் தொகுதி மக்கள் இவரை தோற்கடிக்கின்றனர்.
........
........
இச்சம்பவம் நடந்து சுமார் முப்பத்தி ஐந்து வருடம் ஆகிறது.கட்சியின் ஏகோபித்த ஆசி மற்றும் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி  'தீக்கொழுத்தி' போல பெரும்பாலானோர் தப்பித்து விட்டாலும், அன்று காங்கிரஸ் தொண்டர்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்திய வெறியாட்டம் இன்றும் ஊர் மூப்பர்களால் நினைவுகூரப்பட்டு தான் வருகிறது.






இன்று தங்கள் அரசியல் லாபத்துக்காக மதம் மற்றும் சாதியின் வாலை பிடித்துக் கொண்டு, வெளிஅலங்காரத்துக்காக மட்டும் வெள்ளை உடை தரித்து, அகிம்சையை மேடையில் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் அடிபொடிகளுக்கும் ஒன்றே ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்..


"எழுதப்படவில்லை என்பதற்காக அராஜவாதிகளின் வரலாறு புனிதமாகி விடாது.. அந்த அராஜகங்களினால் பாதிக்கப்பட்டவர்களால், தலைமுறை தலைமுறையாக அவ்வலி கடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்"

Saturday, April 27, 2013

குழந்தை வளர்ப்பு குறித்தான எனது பார்வைகள் - I



1) குழந்தைகள் அலைப்பேசி உபயோகிக்க பழகுவது தனது பெற்றோரை பார்த்து தான்..  குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரங்களில் அலைபேசியில் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பேசுவதை தவிருங்கள். அவர்கள் நம்மை கவனித்துக்கொண்டிருக்க நாம் நீட்டி முழங்குவது தான் பிரச்சனைக்களுக்கான ஆரம்பப்புள்ளி.
2)தொலைக்காட்சி என்பது ஒரு இளைப்பாறுதலுக்கான  இடம் மட்டுமே என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்து விட்டால் துணியை மாற்றுகிறோமோ இல்லையோ முதலில் ரிமோட்டை கையில் எடுக்கும் பழக்கத்தை கை  விட வேண்டும்.
3) 2.30 மணி நேர சினிமா என்பதை முதலில் வெளியே மட்டும் வைத்துக்கொள்வோம்.. குடும்பமாக போய் பார்த்து விட்டு வீட்டில் வந்து ஒரு அரைமணி நேரமாகவே அதை பற்றி உரையாடுவோம்... பல எல்லைகளை தொட்டு வரும் குடும்ப உரையாடல் தான் உறவுபலத்தின் முதல்படி என்பதை புரிந்துக்கொள்வோம்..

4)தொலைக்காட்சியில் சினிமா என்பதை வாரம் ஒருமுறை வைத்துக்கொள்ளலாம்..  அதை தவிர்த்தான அதிகபடியான சினிமா நம்மையும், குழந்தைகளையும் சினிமா போதையில் உட்படுத்தும்..

5) தந்தியோ, தினமணியோ, விகடனோ, கல்கியோ, காலச்சுவடோ, உயிர்மையோ நாம் நமது வாசிப்பை அதிகப்படுத்துவோம்.. குழந்தைகளுக்கான சிற்றிதழ்கள் தபால் வழி வீட்டுக்கே வருகின்றது..குழந்தைகளின் பெயருக்கு அவற்றை வர செய்வது, அவர்கள் வாசிப்பின் உடன் இருப்பது   மேலும் அவர்களை ஊக்குவிக்கும். 
6) நமது அம்மா அப்பா, மனைவியின் அம்மா அப்பா குறித்தான எந்த 'நெகடிவ்' பக்கங்களையும் குழந்தைகள் முன் விவாதிப்பதை தவிர்ப்போம். நமது குழந்தை பெரியவர்களை மதிப்பது, நம்மை வயதான தருணத்தில் கவனிக்க வேண்டும் என்ற எண்ணுவது போன்றவை, நாம் நமது அம்மா அப்பாவிடம் எப்படி இருக்கிறோம் என்பதை பொறுத்ததே..
7) படிப்பு என்பது அறிவையும், ஆளுமையும் அதிகரிக்க செய்யவே.. பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல என்பதை குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துவோம். 
8)கணவனுக்கும்-மனைவிக்கும் எந்த முரண்பாடு இருந்தாலும் குழந்தைகள் முன் காண்பிக்க வேண்டாம். அவர்கள் முன் சண்டைப்போடவும் வேண்டாம்.. குழந்தைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை பெற்றோரிடம் சொல்லாமலே மறைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். 
9)குழந்தைகளுக்கு சேமிக்க கற்றுக்கொடுங்கள். அவர்கள் ஏதாவது சிறப்பாக செய்தால் அதை உற்சாகப்படுத்தும் நோக்கில் 5 ரூபாய்,10 ரூபாய் என்று கொடுத்து சேமிக்க வையுங்கள்.. பண்டிகை தருணங்களில் புத்தாடைகளை அல்லது  அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு பொருளை அவர்கள் பிடித்த வகையில் அந்த சேமிப்பில் இருந்து வாங்கிக்கொள்ள செய்யுங்கள்.. நானே சேமிச்சு வாங்கினதாக்கும் என்று ஒரு 5 வயது குழந்தை மகிழ்ச்சி பொங்க சொல்லும் போது அதன் ஆளுமை திறனையும், சேமிக்கும் பண்பையும் அதிகரிக்கிறோம் என்று புரிந்துக்கொள்வோம்.

10) குழந்தைகளை ஒரு அழகுப்பொம்மையாக சித்தரிப்பதை தவிர்ப்போம்..உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தால் 'வணக்கம்', 'வாங்க','டாட்டா' சொல்ல தெரிந்தலே போதுமானது. 'பாட்டு பாடு',' டான்ஸ் ஆடிகாட்டு' போன்ற அபத்தங்களை தவிர்ப்போம்..

புகைப்படங்கள் உதவி: கூகுள்