Saturday, October 28, 2017

தமிழிசை என்ற வெகுளியான எதிரி

இன்றைய தேதியில், சமூக வலைதளங்களில் அதிகமாக வசைப்பாடப்படும், விமர்சிக்கப்படும் அரசியல்வாதிகள் யாராக இருக்கும்..
1. தமிழிசை 2. ஹச்.ராஜா.............
தமிழிசை, தமிழ்நாடு பிஜேபியின் தலைவர் தான் ; ஆனால், அவர் உளரும் 'தத்து பித்துக்களை' மேலிடத்தில் போட்டுக் கொடுக்க ஆளே இல்லையா?. 'இவர்களை விட மிக கவனமாக மீடியாவுக்கு பூசி மெழுக ஆட்கள் இல்லையா?' இருக்கிறார்கள்.. பிறகு ஏன்?


தமிழக கட்சிகள் அனைத்தும் தனி தனியாக போட்டியிட்டால், இன்று பிஜேபி யின் இடம் எதுவாக இருக்கும்? ஐந்து/ஆறு/எழு..... பிறகு ஏன் மெர்சலுக்கு விஜய்யை, தோழர் திருமாவை என சம்மந்தமே இல்லாமல் இவர்கள் வம்புக்கு இழுக்க வேண்டும்?

எளிமையாக நான் கண்டறியும் முதல் காரணம்..
நாம் பேச வேண்டும், முழுமையாக அவர்களை பற்றி நாம் பேச வேண்டும்.. நாம் பேசி பேசி அவர்களை ஒதுக்க வேண்டும். முடிவில், நம்மை எதிர்ப்பவர்கள் அவர்களை ஆதரிக்க செய்யவேண்டும்.. அவ்வளவே. (இப்போது தமிழகத்தில், அவர்கள் இடம் எதுவாக அமையும் என யோசித்துப் பாருங்கள்).

குமரி மாவட்ட வேட்டை சமூகங்களுக்கு தெரிந்த (நிஜ)கதை தான் இது. காட்டு பன்றியை வேட்டையாட போகும் போது, கூடவே ஒரு சவலை பட்டியையும் (மெலிந்த நாய்) தூக்கிக்கொண்டு போவார்களாம். காட்டுபன்றியை துரத்தி ஒரு பாறை முடுக்கில் கொண்டு செல்லும்போது, முதன்முதலாக அவர்கள் தூக்கி வீசுவது, அந்த 'சவலை பட்டியை'தான்.. இனிமேல், மீளவே வழியில்லை என நினைக்கும் காட்டுப்பன்றி, முதலில் தன் முன்னிருக்கும் அந்த மெல்லிய நாயை தாக்க முயலும். அந்த நாயை, காட்டுப்பன்றி தாக்கும் தருணத்தில், அந்த பன்றியை வேட்டைக்காரர்கள் கொன்றிருப்பார்கள்.
இப்போது, நாம் விவாதிக்கும் தமிழக அரசியலோடு இந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்திப் பாருங்கள் விடை கிடைக்கும்.. ஏன் கே.டி ராகவன்கள், நாராயணன்கள், நிர்மலாக்கள் இது பற்றி பேசவே இல்லை என்பதும் புரியும்.

இன்னொன்று, கடந்த சட்டசபையில் (2011-2016) தமிழக அமைச்சர்கள் செய்த கூத்துக்கள் நியாபகம் இருக்கிறதா?. அன்று வெகுஜன மக்களிடையே பழக்கமாக இருந்த ஒரு வாக்கியம், 'இவங்க எப்படி இருந்தாலும், அவங்க(ஜெ) நல்ல கவர்னன்ஸ் தருவாங்க...' ; இது போன்ற ஒரு உத்தியை தான் நம்மிடையே மீண்டும் புகுத்த எத்தனிக்கிறது பிஜேபி.. அநேகமாக அந்த புதிய 'அவங்க' நிர்மலா சீத்தாராமனாக இருக்கலாம்.

...........
இந்த நிலையில், கடந்த 20 செப்டம்பர்'17 அன்று ஜூனியர் விகடனில் வெளிவந்த தமிழிசையின் பேட்டி மிக முக்கியமானது..
அது
//
“உங்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகரும் கூட உங்கள் பேச்சை விமர்சிக்கிறாரே?”
“கட்சியைத் தாண்டி, சாதி ரீதியாக சிலர் யோசிப்பதால் வரக்கூடியப் பிரச்னை இது.”
//
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல் எதை முன்வைத்து நகர்கிறதோ, அதை தெரிந்தோ தெரியாமலோ தன் வாய்வழி உதிர்த்திருக்கிறார் தமிழிசை.
<; font-family: inherit;">இப்போதைக்கு ஒன்றே ஒன்றை சொல்ல முடியும்; பிஜேபி கோட்டையிலிருந்து தமிழிசை போன்ற வெகுளியான எதிரி, நமக்கு இனி எப்போதும் கிடைக்கப்போவதில்லை..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156069063197780

தமிழ் பெண்கள் அழகா Vs கேரளா பெண்கள் அழகா - நீயா நானா

எப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்னோட 2 சென்ட்ஸ்.. தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை தக்க வைக்க இப்பிடி ஒரு சர்ச்சையான தலைப்பை 'நீயா நானா' குழு வைத்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 'அழகு' என அவர்கள் சுட்டுவது கூட நிறத்தை முன்வைத்தே என்று நினைக்கிறேன்.
...

கேரளாவில் யூதர்கள் குடியேறி சுமார் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிறது, யூதா மாப்பிளாக்கள் என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஐரோப்பியாவின் கிழக்கு பகுதியில் இருந்து கிளம்பிய கிறிஸ்தவர்கள், இங்கிருந்தே பூர்வகுடிகளோடு கலந்து இன்று தோமா கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மாப்பிளாக்கள், வணிகம் செய்யவந்த தங்கள் 'அரேபிய' வேர்கள் தொடர்பான கதையாடல்களை மறுப்பதில்லை.

பத்தாம் நூற்றாண்டில் கேரளாவில் காலடிவைத்த ஆரிய நம்பூதிரிகளின் இனக்கலப்பு இன்னொரு புதிய ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டது. நம்பூதிரிகளுக்கு படுத்து சேவை செய்வது கடவுளுக்கே செய்வது என வரிகளை உருவாக்கி, அது மருமக்கதாயம், தறவாடு என இன்னொரு மோசமான கலாச்சார சூழ்நிலைக்கு அங்கிருந்த பெண்களை கொண்டு சென்றது (இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்).

பிறகு கேரளாவுக்கு வந்த, போர்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சு காரார்கள்.... என்ன மூச்சு முட்டுதா? ;-)

ஆக மலைநாட்டு வெத்திலையோடு, சுண்ணாம்பு பாக்கு புகையிலை எல்லாம் போட்டு இடித்து சிவப்பாக்கி விட்டு, தமிழகத்தில் இருக்கும் கம்மாறு வெற்றிலை அழகில்லை என சொன்னால் நியாயமா நியாயம்மாரே..


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156053821267780

அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக

அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக..
.........
ஸ்டாலின் பெலிக்ஸ்' என்ற எனது பெயரின் இரண்டாவது பகுதியை வைத்தது எனது பெரியம்மா. அப்பா எனக்கு 'கார்ல் மார்க்ஸ்' என பெயர் வைக்க நினைத்தாராம், ஊர் கிழவிகள் அந்த பெயரை மென்று தின்று விடுவார்கள் என சொல்லி அம்மா கடுமையாக மறுக்க, பின் ஸ்டாலின் என வைத்திருக்கிறார்கள். சென்ற முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த போது, எனது தாய்மாமன் என்னிடம், 'ஸ்டாலின்' என எனக்கு பெயர் வைத்து, அதை பிறப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது அவர் தான் என்றார்.
பெரியவர்கள் செய்த தவறை நாம் செய்யக்கூடாது என்று கருதிய காலகட்டத்தில் ஈழம் நம் கையை விட்டு போயிருந்தது. அதற்க்குபின் பிறந்த மகளுக்கு 'எழில் ஓவியா' என்றும் மகனுக்கு 'இளஞ்சேரல்' என்றும் பெயர் சூட்டி மகிழ்தோம். 2012 ஆம் ஆண்டில் எனது பெயரையும் தூயதமிழில் மாற்றிக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்த சூழ்நிலையில் புலம் பெயர்ந்தேன்.
2014 லுக்கு பின் காவி பயங்கரவாதிகள், தமிழ்/செங்கிருந்த பெயர்களை தவிர்த்து மற்ற அனைத்து பெயர்களையும் 'எதிரி'களாக சித்தரிக்க துவங்கிய போது, நான் எனது பெயரை மாற்ற நினைத்தது தவறு என முதன்முதலாக உணர்ந்தேன்.
இப்போது பாம்பு வேறு வடிவில் காலை சுற்ற துவங்கி இருக்கிறது. யாரெல்லாம் இன உணர்வில் தங்கள் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றிக் கொண்டார்களே அவர்களை 'டார்கெட்' செய்து, பாருங்கள் தமிழ் பெயரில் ஒளிந்து இருக்கும் கிறிஸ்தவர்களை என பரப்புரை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்களுடைய இந்த பரப்புரை எந்த பெரியபாதிப்பை உருவாக்கப் போவது இல்லை என்றாலும், 'ஒருவேளை அப்படி இருக்குமோ....'என்ற லேசான சந்தேக உணர்வை பொது நிலையினரிடம் தூண்டி விடுவதே இந்த 'காவி அடிமைகளின்' நோக்கம்.
...
இனி, எந்த சூழ்நிலையிலும் இந்த 'தண்ணீர் பாம்புகளுக்காக' நான் பெயர் மாற்றிக்கொள்ள போவதில்லை. பெயரை வைத்து, 'அசலான்' என வசைபாடும் ஹச்.ராசா சர்மா வாவை விட நாங்கள் கறுப்பர்கள். ஒரே மண்ணில் நீண்ட தலைமுறை தலைமுறையாக வாழும் ஒரு பாரம்பரிய மரபு எங்களுக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் விட, உங்களை விட அட்சர சுத்தமாக வள்ளுவ தமிழை நாங்கள் பேசுகிறோம். போடா டேய்..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156052037127780

.........................................
அமெரிக்கா போன நம்மூர்...
கிருஷ்ணன்-கள் எப்படி Chris ஆனார்கள்?
கோபால்-கள் எப்படி Gops ஆனார்கள்?
சந்தனமூர்த்தி -கள் எப்படி Sandy ஆனார்கள்?
சரவணன் -கள் எப்படி Sarav ஆனார்கள்?
என்பதையும் ஆராய்ந்து சொல்லலாம் ஹச்.ராஜா சர்மா ஜி..
என்ன, அமெரிக்கக்காரன் இதெயெல்லாம் கண்டுக்காம விட்டிருவான். அவன் காலை நக்கி பிழைக்கும் உள்ளூர் நாய்கள் தான் குறைத்துக் கொண்டிருக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156049092382780





மெர்சல் - பலமற்ற எதிரியை உருவாக்குகிறதா ரா?

தமிழிசையின் 'மெர்சல்' விஜய் தொடர்பான விமர்சனமும், அதற்க்கு 'நம்மவர்கள்' தரும் பதிலடியை பார்க்கும்போது சலிப்பாகவும், கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் 'ரா'மையாக்களால் நாம் திசைத்திருப்பப்படுகிறோம்.
முதலில் நடிகர் விஜய் தொடர்பாக ஒரு டிஸ்க்கிளைமர்: என் வாலிபத்தின் ஆரம்பக் கட்ட நாட்களை முழுமையாக ஆக்கிரமித்தப் படம் 'பூவே உனக்காக'. கணக்குவழக்கே இல்லாமல் பார்த்தப்படம் அது. இன்றும் அந்த படத்தின் கிளைமாக்ஸ் வசனங்களை அப்படியே ஒப்புவிப்பேன். விஜயை எனக்கு பிடிக்கும் என வெறுமன சொன்னால், என் மகள் கோபித்துக்கொள்வாள்.. ஏனென்றால், அவளுக்கு விஜய், மிக மிக மிக பிடித்தமான நடிகர்.
இனி விசயத்துக்கு வருவோம்,
உலகமயமாக்கலின் உச்சத்தில் இருக்கும் இந்த நாட்களில் தான், தமிழ்நாட்டில் மட்டும் தீவிரமான மண் சார்ந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. தெற்கே 'இந்தியா' என்ற கற்பிதத்துக்கு இன்றளவும் சிம்ம சொற்பனமாக இருப்பது, இங்கிருக்கும் 'ஆரிய எதிர்ப்பு' கருத்தியல் தான். ஆக, 'இந்திய' 'பாரதிய' கருத்தியலை எதிர்க்காத, ஆனால் மண் சார்ந்த விசயங்களை பேசும் கட்சியோ, ஆட்களோ 'இராமையா'வுக்கு வேண்டும். அதற்கான தற்போதைய இரை தான் விஜய்.
திராவிட கருத்தியலும், தீவிர இடதுசாரி கருத்தியலும் கோலோச்சிய காலம் ஒன்று தமிழகத்தில் இருந்தது. இரண்டு கருத்தியலை ஒரு சேர அடித்து நொறுக்க ராமையாவுக்கு கிடைத்த ஆளுமை 'எம்ஜிஆர்'. தமிழ் மண்ணில் வளர்ந்த இடதுசாரி தத்துவங்களை நொறுக்க எம்ஜிஆரை, அமெரிக்காவின் சி.ஐ.எ அமைப்பு வரை உபயோகித்தது என்பதை நான் சொல்லவில்லை, காங்கிரசின் 'நவசக்தி' இதழ் ஏழுபதுகளின் பகுதியில் சொன்னது,எழுதியது.
இனி விஜய்க்கு வருவோம், 'ஆம், அவர் திரையில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக, வடநாடு அரசியல்வாதிகளுக்கு எதிராக' கருத்துகளை முன்வைக்கிறார். ஆனால், நிஜத்தில் அவர் எத்தனை முறை இதே அரசியலை பேசி இருக்கிறார்?. அவர் பேச மாட்டார். ஏனென்றால், அவருடைய களம் என்பது 'முதலமைச்சர்' அரசியல் கொள்கைகளே தவிர, எந்த தொண்டரையும் கார்பரேட்டுக்கு எதிராகவோ, நடுவண் அரசியலுக்கு எதிராகவோ வலுவாக உருவக்குவது அல்ல. எம்ஜிஆர் என்ற சினிமா பிம்பத்தை எந்த தத்துவமில்லாமல் ஆதரித்ததற்கான விலையை தான், நான்கு தசமங்கள் தாண்டியும், ஓபிஎஸ்-எபிஎஸ் என இன்றளவும் கொடுத்து வருகிறோம்.
ஆக, விஜய் என்ற ஒன்றை நபர், அடுக்கு மொழி வசனங்களை பேசி நடுவண் கட்சிகளுக்கு எதிராக பேசுவதும், அவரை ஒரு எதிரியாக தமிழகத்தில் உருவாக்குவதும், காட்டுவதும் இராமையாகளுக்கும் ஒரு இலகுவான இலக்காக போய் விடும். ஒரே ஒரு சிபிஐ ரெய்டில் எல்லா வீர ஆவேச பேச்சையும் அப்படியே சரணடைய செய்து விடுவார்கள். 'காங்கிரசோ' 'பிஜேபியோ' வேறு எந்த இந்திய கட்சியோ, 'இளைய தளபதியின்' ஒரே அறிக்கையிலே தம்பிகள் அடங்கிப் போய் விடுவார்கள், ஏனென்றால் தத்துவமில்லாத அரசியல் என்பது ஒரு முட்டுசுவர். தமிழகத்தில் தற்போது நடப்பதும் அது தான்.
ஆக, தோழர்களே/உறவுகளே/தம்பிகளே, 'அரசியல் கவனிப்போம்' 'அரசியல் பேசுவோம்' பின் 'அரசியல் செய்வோம்'.
பின்குறிப்பு> 'இராமையா' என்றால் என்னவென்று புரியாத புதியவர்களுக்கு, இந்திய உளவு அமைப்பான 'ரா' வுக்கு தமிழ் தோழர்கள் வழங்கிய கேலிப் பெயர்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156046111982780

டகிலா கவிதைகள் 1

நண்பன் கண்ணாடி அணிய துவங்கும் போது..
நண்பனின் தாய் மரணிக்கும் போது..
நண்பனின் மகள் பூப்பெய்தும் போது...
நண்பனின் மனைவி படிதாண்டும் போது...
ஒரு பிரம்மச்சாரி வயதாவதை உணர்கிறான்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156045751237780

கியூபாவை உலுக்கிய டெங்கு காய்ச்சல்


1980 ஆம் வருடம், அமெரிக்க ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து ஒரு கப்பல் கியூபா நோக்கி செல்கிறது. கியூபாவில் இருந்த சோவியத் ரஷ்ய படைகளுக்கு எதிராக உபயோகிக்க, 'கிருமி'களை அந்த கப்பலில் எடுத்துச் செல்கிறார் ஒமேகா 7 என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் எட்வர்டு அரோசினா.
எட்வர்டு அரோசினா-வுக்கு இந்த கிருமிகளை கொடுத்தனுப்பிய சி.ஐ.எ வின் கணக்கோ வேறுமாதிரி இருந்தது. விளைவு, சுமார் மூன்று லட்சம் கியூபன் மக்களை இந்த டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது. கியூபா மருத்துவதுறையில் வெகு முன்னேறிய நிலையில் இருந்ததால், 154 மட்டுமே இந்த 'பயோ வார்' ஆல் கொல்லப்படுகின்றனர், இதில் 101 பேர் குழந்தைகள் என்பது கியூப வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.
.............................
இன்னும், இன்னும் எழுதி பீதியை உருவாக்க விரும்பவில்லை.. ஆனால், 'எல்லாவற்றையும் சந்தேகி' என்ற பேராசான் மார்க்ஸின் வார்த்தைகள் என்னை துரத்துகிறது.


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780🙄


கற்றது தமிழ் - 10 ஆண்டுகள்

'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான போதும் ஐ.டி துறையில் தான் இருந்தேன். உதயம் திரையரங்கில், பத்துமணி காட்சியை பார்த்து விட்டு, அந்த நடுநிசி பனியில், கண்ணீரோடு அறைக்கு சென்றது இன்றும் நினைவில் உறைந்து போய் இருக்கிறது.
ஐ.டி துறையினரை படம் கடுமையாக சாடுகிறது என பரவலான விமர்சனங்கள் வந்த போதும், ஒருதடவை, இரண்டு தடவை, மூன்று தடவை.. என கணக்கே இல்லாமல் அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன், பார்க்கிறேன். இன்றளவும் 'கற்றது தமிழ்' எனது All time favourite.
சரி, 'கற்றது தமிழ்' எதைப் பேசுகிறது?
காதலையா? ஆம்.
உலகமயமாக்கலையா? ஆம்
தாய் மொழி கல்வி, சொந்த மண்ணில் அகதி ஆக்கப்பட்டதையா? ஆம்
கார்பரேட் உலகம் உருவாக்கிய தனி மனித சிக்கலையா? ஆம்.
ஆம், அமெரிக்காவில் ஒரு வங்கி வீழ்ந்தால், அம்பத்தூரில் கல்யாணம் நின்று போய் விடும் இன்றைய வாழ்க்கை சூழலை பத்து வருடங்களுக்கு முன்பே அந்த படம் பேசியது.

ஜீவா, அஞ்சலி என எத்தனையோபேருக்கு வாழ்வளித்த இந்தப் படம் முன்வைத்த அரசியலை, தமிழ் சினிமா இதற்க்கு முன்னரும் பேசியதே இல்லை, இதற்க்கு பிறகும் பேசவில்லை. இனிமேலும் யாராவது பேசுவார்களா என்பதும் சந்தேகமே..
எங்கையோ இருந்து ஒருவன் நமது வாழ்க்கையை, மொழியை, பண்டிகையை, கலாச்சாரத்தை தீர்மானிக்கும் வரை 'கற்றது தமிழ்' தமிழ் சமூகத்தில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்..பேசப்படும்.



இன்றோடு 'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது. இத்திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது அன்பும், வாழ்த்துகளும்.
Katrathu Tamil

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156009305897780

மதமாற்றம் - பார்ப்பானியம்

'பிஸ்கட்டுக்கும், மாவுக்கும் தானல மதம் மாறினீங்க!' என கல்லூரில் நாட்களில் ஹிந்து(த்துவா) நண்பர்கள் கிண்டல் அடிப்பதுண்டு. நண்பர்களையே எதற்கு மதசர்ச்சை என பலரும் அதை பகடியாக கருதி கடந்து விடுவோம்.. 
Dick Kooiman என்ற ஆய்வாளரின் புத்தகத்தை வைத்து ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிக்க முடிந்தது. அதில் இருந்த சுவாரசியமான 'மதமாற்ற' வரலாறுகள்...
கார்த்திகை, மார்கழி மாதங்களில் திருவாங்கூர் ஹிந்து கோயில் விழாக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்யவேண்டியது கட்டாயமானதான இருந்திருக்கிறது. ஆனால், 'கிறிஸ்தவத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்' அந்த பணிகளை செய்யவேண்டியது இல்லை என்ற நடைமுறையும் இருந்துள்ளது. ஆக, இந்த கோயில் விழா காலங்களில், கிறிஸ்தவத்தில் இணைபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், விழா முடிந்ததும் அந்த எண்ணிக்கை குறைந்ததாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.
இன்னொன்று, 1914 ல் கிறிஸ்தவர்கள் மீது இருந்த Poll Tax விலக்கிக்கொள்ளப்பட்டதும், சுமார் ஆயிரம் குடும்பங்கள் கிறிஸ்தவத்தை நோக்கி வந்திருக்கிறார்கள். பின், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கும் அதே வரி விலக்கிக்கொள்ளப் பட்டபோது, அந்த சர்ச்ல் இருந்த குடும்பங்களில் எண்ணிக்கை 20.
............
குமரியின் கிறித்தவ மதமாற்றம் என்பது நீண்டதொரு வரலாற்று பின்புலத்தை கொண்டது. படையெடுப்புகளிலிருந்து காத்துக்கொள்ள, வர்ணாசிரமகட்டுகளில் இருந்து விலக, வரி விலக்குக்காக, கல்விக்காக என ஒவ்வொரு காலத்திலும் மக்கள் மதம் மாறினாலும், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்த மண்ணின் மரபார்ந்த(சிலவகை மூட பழக்கம் என்றாலும்) விசயங்களை கடைபிடிக்கிறார்கள் என்பது திண்ணம்.
பேசுவோம்..
#Travancore
#திருவாங்கூர்
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155997266592780

...................................................
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், தென் திருவாங்கூரில் தாழ்த்தப்பட்ட பெண்கள், உயர்சாதியின பெண்களை போல சேலை உடுத்த முற்பட்டபோது, பிரச்சனை திருவாங்கூர் அரசவைக்கு சென்று, பின் இங்கிலாந்து வரைக்கும் அந்த பஞ்சயாத்து சென்றது. அரசு மற்றும் உயர்சாதி தரப்பில் இருந்து அதை மறுத்து, 'தாழ்த்தப்பட்டவர்கள் மேலாடை அணியாமல் இருப்பது தங்கள் நாட்டு கலாச்சாரம்' என்றார்கள்.
இன்று, மனிதன் நவீனமாக விட்டான். செயற்கை இதயத்தையே கண்டுபிடித்து விட்டான், செவ்வாய்க்கும் ராக்கெட் அனுப்பி விட்டான்
இவனுங்க என்னன்னா... வே புன்னைகைங்க..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155991922732780

வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி

வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி
.................................................................
திருவாங்கூர் ஆர்க்கியாலஜிக்கல் சீரிஸ்-ல், ஒரு குறிப்பை தேடி துளாவிக்கொண்டிருந்தேன், திடிரென ஒரு வரி என்னை கொஞ்சம் தூக்கி போட்டது.
12 ஆம் நூற்றாண்டு, சரியாக மார்ச் 1173 ஸ்ரீ வீர் உதய மார்த்தாண்ட வர்மன் என்ற அரசன் வேணாட்டை (பிற்கால திருவாங்கூர், இன்றைய கன்னியாகுமரி) ஐ ஆண்டு வருகிறார். அந்த வேணாட்டின் அப்போதைய தலைநகராக இருந்த இடம் 'குழிக்கோடு'.
Some Early Sovereigns Of Travancore எழுதிய சுந்தரம் பிள்ளையும் 'குழிடைகூறு' என முன்வைக்கிறார். திருவாங்கூர் குறித்து இன்று எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், தரவுகளாக கையாளும், 'திருவாங்கூர் ஸ்டேட் மானுவேல்' எழுதிய நாகம் ஐயா குழிடைகூறு தான் பிற்காலத்தில் குழிகோடாக திரிந்ததாக எழுதுகிறார்.
சரி அதற்க்கு இப்போ என்ன என்கிறீர்களா? குழிக்கோடு' என்னுடைய சொந்த மண்; என் தந்தைவழி பாட்டன், பூட்டன், ஓட்டன் வசித்த மண். சிரிக்கவா, அழவா, பெருமிதப்படவா, சலிப்படையவா என்ற உணர்வு.
என் அனுபவத்திலும், முன்னோர்களிடம் இருந்து கேட்ட செவிவழி கதைகளிலும் எங்கள் மண்ணில் ஆட்சியாளர்கள் இருந்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு அம்மன் கோயில் தவிர, வேறு எந்த கட்டுமானங்களுமே இல்லாத விவசாய மண் அது.
வரலாறு இப்படி தான், யார் யாருக்கு எது எது தேவையோ, அப்போது அதை கையில் தூக்கி எடுத்து அரவணைத்துக்கொள்கிறார்கள் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை போல. அது பக்கத்து வீட்டுக்காரனை பார்த்து முறைக்கும் போது தான், நமக்கு வேடிக்கை காத்திருக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155986799712780

இரணியல் பாண்டியர் கோட்டை

1956, மலையாளி ஆதிக்கத்தை உடைத்து தாய் தமிழகத்துடன் தென் திருவாங்கூர்(கன்னியாக்குமரி) இணைவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு, பாராளுமன்றத்தில் குமரி இணைப்பு தொடர்பாக ஒரு அனல் பறக்கும் விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. விவாதத்தில் குறுக்கிட்ட, ஸ்ரீ அச்சுதன் என்ற மலையாள எம்பி "குமரி தமிழகத்துடன் இணையும் போது அங்கிருக்கும் மலையாளிகளின் நிலை என்ன?" என ஐயா மார்ஷல் நேசமணியை நோக்கி கேட்கிறார்..
ஐயா நேசமணி, "நாங்கள் எதுவெல்லாம் எங்களுக்கு வேண்டும் என்கிறோமோ, அது எல்லாம் இங்கிருக்கும் மலையாளிகளுக்கும் பகிரப்படும். எங்கள் தாய்மொழி தமிழ் மொழியாக இருந்த போதும், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் மலையாளத்தில் படிக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஆனால், குமரி-தமிழகம் இணைப்புக்கு பின் இங்கிருக்கும் மலையாளிகள் அவர்கள் தாய் மொழிகளில் படிப்பதை உறுதி செய்யும் விதத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்" என்றார். அவ்வளவு நூற்றாண்டு கால துயரத்துக்கு பின்னரும், மொழி சிறுபான்மையினரை நோக்கி யோசித்த உன்னதமான மனது , எங்கள் குமரி தந்தையின் மனது. இன்றளவும், குமரியில் மொழி சிறுபான்மையினருக்காக 'மலையாளம்' தனியாக கற்பிக்கப்படுகிறது.
............
இனி விசயத்துக்கு வருகிறேன்,
குமரி வீரத்தமிழர் முன்னணியை' சேர்ந்த நண்பர்கள் சிலர், சிதைந்த நிலையில் இருக்கும் இரணியல் அரண்மனைக்கும், பாண்டியருக்கும் உள்ள தொடர்பை கண்டறிகிறார்கள். அதற்கான ஆதாரத்தை திரட்டியதும், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோட்டையை விரைவாக செப்பனிட கோரிக்கை வைக்கின்றனர். அவ்வளவு தான், இத்தனை நாள் 'இரணியல் கோட்டைக்கும், மலையாளிகளுக்கும்' முடிச்சுப்போட்டுக் கொண்டிருந்த 'குமரி' மலையாளிகளுக்கு கோபம் வர, அவர்கள் ஆற்றிய எதிர்வினை தான் கீழே உள்ள புகைப்படம்.
'இரணியல் பாண்டியர் கோட்டை' என நம்மவர்கள் முன்வைத்ததை 'இரணியல் "பாண்டி" பேலஸ்' எனவும், 'கண்டன் வீர நாராயண பாண்டிய' அரசன் என நம்மவர்கள் முன்வைத்ததை 'வீர நாராயண பாண்டிய' "கொத்தனார்" என நக்கல் அடித்து அவர்களது 'கன்னியாகுமரி மலையாளிகள்' முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
.............
அன்பு மலையாளிகளே,
ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது, .போரை நிறுத்தக்கோரி கு முத்துக்குமார் என்ற தமிழ் சகோதரன், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு,தன் உடலையே தீக்கு இரையாக்கினான். அந்த கடிதத்தில் வரும் சில வரிகளை கீழே கொடுத்துள்ளோம்.
//
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும் //
ஆம், நீங்கள், உங்கள் குழந்தைகள், உங்கள் பெண்கள் என அனைவரும் கேரளத்தில் வாழ்வதை விட குமரியில் அதிக பாதுகாப்புடனே வாழ்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பாண்டியர் கோட்டை பற்றி உங்களுக்கு முரணான பார்வை இருந்திருந்தால், ஒரு நீண்ட உரையாடலுக்கு நண்பர்கள் தயாராகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் வழக்கம் போல உங்கள் மேட்டிமையை காட்ட "பாண்டி" "கொத்தனார்" என கிண்டலடித்து, வன்மத்தோடு சிரித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
பாண்டியர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
நெடுஞ்சடையன் வேணாட்டை அதகளம் செய்து, நூற்றுகணக்கான யானைகளையும், குதிரைகளையும் பறித்து விழிஞத்தை நொறுக்கி எடுத்த கதை உங்களுக்கு தெரியுமா?
பரந்தக பாண்டியன் படையெடுத்து வந்து துவம்சம் செய்து, பின் அன்றைய அனந்தபுரம்(இன்றைய திருவனந்தபுரம்)தில் இருந்த கோயிலுக்கு தங்க விளக்கு வாங்கிக்கொடுத்த கதை தெரியுமா?
இன்னும் பல வரலாற்று கதைகள் உண்டு. நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளும், பட்டையங்களும் கேரளாவில் பாண்டியர் அடையாளங்களை சொல்கிறது. உங்கள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலும் கொஞ்சம் உள்ளது, தேடி வரலாற்றை படியுங்கள்.
இறுதியாக,
நம்பூதிரிகளை, "குனிந்தும், படுத்தும்" கவனித்து, அரசவை மற்றும் அதிகார செல்வாக்கை உருவாக்கி, அந்த பலத்தில் தனக்கு கீழ் இருந்தவனை சவுட்டி 'யாமானே' என கதற வைத்த ஜென்மிகள் காலமில்லை இது. நீண்ட போராட்டங்களுக்கு பின், கடும் உழைப்பாலும், கல்வியாலும் முன்னேறி பொருளாதார தன்னிறைவை எட்டிய தமிழ் சமூகங்கள் தன் முன்னோர் வரலாறை மீள்வாசிப்பு செய்யும் காலம். அந்த சமூகங்கள் வசிக்கும் மண்ணில் இருந்து தான் இப்படி நக்கல் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள்

கடந்தகால வரலாறுகள் தொடர்பாக உரையாட நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். இதை இப்படி வன்மத்தை தான் தொடர்வீர்கள் என்றால், இப்போது எழுதிக்கொண்டிருப்பது போல எப்போதும் எங்கள் பேனா முனை மட்டும் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்காது.
இப்படிக்கு,
இலட்சக்கணக்கான குமரி தமிழர்களின் ஒருவன்
ஸ்டாலின் பெலிக்ஸ் ம

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155978231352780

.....................
இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் Rev. சாமுவேல் மீட்டீர் எழுதிய The Gospel of south india என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
திருவனந்தபுரம் கோட்டையில் இருந்த 'ஐந்து பாண்டியர்' சிலையில் ஒன்று என அந்த குறிப்பு சொல்கிறது. அப்படியென்றால், அந்த சிலை இப்போது எங்கே உள்ளது?
பாண்டியர் படம் திருவனந்தபுரம் கோட்டையில் இருக்கிறது என்றால், முந்தைய பாண்டியர் செல்வாக்கு எந்த அளவுக்கு இன்றைய கேரளாவில் இருந்தது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டிய ஒன்று..
கண்டன் வீரநாராயண பாண்டிய கோட்டையை புதுப்பிக்க நண்பர்கள் கோரிக்கை வைத்ததும், அதை நக்கல் அடித்து 'இரணியல் பாண்டி அரண்மனை' என ஏழுதும் கன்னியாகுமரி மலையாளிகளுக்கு, திருவனந்தபுரத்தில் இருப்பதும் எங்கள் அடையாளமே என திருப்பி அடித்தால் தான் அடங்குவார்கள் போல..
https://www.facebook.com/shares/view?id=1979806868952694

ஜெர்மனி தேர்தல்2017

ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின், சுமார் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தீவிர வலதுசாரி கட்சி(AFD) ஒன்று ஜெர்மன் பாராளுமன்றத்தில் 'எதிர்க்கட்சி'யாக நுழைய இருக்கிறது.
தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக்கணக்கான அகதிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இது நல்ல செய்தி அல்ல..
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155971856007780

.............................
ஜெர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியான SPD, மெர்கலின் CDU வோடு கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதில்லை என அறிவித்து இருக்கிறது.
இனி, CDU வோடு அணி சேர மிஞ்சி இருப்பது FDP (10%) யும், Green பார்ட்டியும்(9%) தான். இரண்டு கட்சிகளுமே கொள்கை அளவில் முரண்பாடுகளை கொண்ட கட்சிகள். இரண்டுமே, கூட்டணி ஆட்சிக்காக தங்கள் கொள்கைகளை தளர்த்திக் கொள்ளப்போவதில்லை என அறிவித்து இருக்கின்றன.
இடியப்ப சிக்கல் காத்திருக்கிறது முன்னாள் இயல்பியலாளரான மெர்க்கலுக்கு.. 
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17
#Jamaica_Coalition

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155972554402780
........................
ஜெர்மன் சுவர் வீழ்ந்து சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்ட பிறகும், கிழக்கு ஜெர்மானியர்களுக்கும் மேற்கு ஜெர்மானியர்களுக்கும் இருக்கும் 'மன' இடைவெளி இந்த தேர்தலிலும் வெளிப்பட்டு இருக்கிறது.
நாஜிக்களின் வீழ்ச்சிக்கு பிறகு, கிழக்கு ஜெர்மனி சோவியத்தின் பக்கம் போய்விட, மேற்கை அமெரிக்காவும், பிரான்சும் பங்கிட்டுக் கொண்டன. சோவியத்தின் நிழல், ஸ்டேசி, ஸ்டாலினிசம் என இறுக்கமான ஒரு சூழல் கிழக்கில் இருக்க, மேற்கில் தாராளமயமும் வேலைவாய்ப்புகளும் நிரம்பி வழிகிறது. கியூபா, வியட்நாம் என ஒருசில அயலாரை கம்யூனிச கிழக்கு ஜெர்மனி 'guest'களாக கொண்டு வர, மேற்கிலோ துருக்கியில் இருந்தும், பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குவிய துவங்குகிறார்கள்.
கிழக்கும் மேற்கும் இணைத்த பிறகு, கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக்கணக்கான ஜெர்மானியர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆயினும் ஜெர்மானியர்கள் தவிர, புதிய மனிதர்களை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ள அவர்கள் வளர்ந்த சூழல் பெரும் தடையாக இருக்கிறது.
2015 ல் ஜெர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிக்க, "முணுமுணுப்புகள்" அதிகம் கேட்டது கிழக்கு ஜெர்மனியர்களிடமிருந்தே. இந்த தேர்தலிலும் கிழக்கு ஜெர்மனியர்களின் எண்ணவோட்டம் ஓட்டுக்களில் பிரதிபலித்து இருக்கிறது. 2013 ல் துவங்கப்பட்ட தீவிர வலதுசாரி கட்சியான AFD க்கு மேற்கு ஜெர்மனியில் இருந்து 10 ஓட்டுகள் கிடைத்தால், 20 ஓட்டுக்கள் கிழக்கு ஜெர்மனியில் இருந்து கிடைத்திருக்கிறது. அதாவது 1:2 என்ற விகிதத்தில். நான்கே ஆண்டுகளில் ஜெர்மனியின் மூன்றாவது பெரிய கட்சியாகி, பாராளுமன்றத்தில் முதன்முதலாக நுழையப்போகிறார்கள் AFD யினர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, ஜெர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் நிறைய திருப்பங்களை தரக்கூடிய அரசியல் காத்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து

"அப்பா, உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்", - நான்.
"முன்னாடி சிவாஜி, இப்போ கமல்", -அப்பா.
இந்த உரையாடல் நடத்து சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை கமல் எனக்கு பிடித்தமான நடிகர் (கவனிக்க 'ஆதர்சமான' ஹீரோ அல்ல). நாயகன்-க்கு பிறகு கமலின் எந்த திரைப்படத்தையும் தவற விட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
சென்னை வந்த பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 'பஞ்சதந்திரம்' படபிடிப்பு நடக்கிறது என்றதும், SRM கல்லூரி மதில் சுவர் தாண்டி, கமலை பார்த்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.
புத்தக வாசிப்பு தொடர அவர் மீதான விமர்சனம் முதன்முதலாக என்னுள் எழுகிறது.
ஒருகாலத்தில் சிலாகித்து பார்த்த குருதிபுனல்-ல் இருந்து பின்பு வந்த 'உன்னை போல் ஒருவன்','விஸ்வரூபம்' வரைக்கும் கமலோடு முரண்படுகிறேன். ஈழ வீழ்ச்சிக்கு பின்னால் கமலில் சில நிலைப்பாடுகள்(குறிப்பாக IIFA பங்கேற்ப்பு தொடர்பாக) இந்த முரண்பாடுகளை இன்னும் கூர்மையாக்குகிறது.
இனி நிகழ்காலத்துக்கு..
நான் சிவப்பாக்கும் என சொல்லி விட்டே நான் கறுப்பாக்கும் என இன்னொரு பக்கம் கால் வைப்பது எல்லாம் அயோக்கியத்தனம் அல்ல; அவர் உள்வாங்கிய அரசியலில் உள்ள முரண். தேர்ந்த ஒரு வாசகரான கமல், தமிழ் சமூகத்தின் கடந்து வந்த காலத்தை பற்றி கற்று வைத்திருக்கிறார். ஆனால், சமூக உரையாடல் அற்றுப் போன ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்ததாலையே என்னவோ தான் "நீட்" என்றால் என்னவென்றே அறியாமல் அவரை ஒரு டிவிட் போட வைத்தது.
கருப்பு-சிவப்பு அரசியலை மட்டும்பேசிக்கொண்டிருப்பது ஓட்டு ஆகாது என்பது அவருக்கு புரிந்திருக்கிறது. 'ஊழல் ஒழிப்பேன்' 'காவியும் கருப்புக்குள் அடக்கம்' 'டிமானிடைசேசன்' 'யோகி' என அவர் உதிர்த்த கருத்துகள் எல்லாம் கறுப்புக்கும் சிவப்புக்கும் இடையே அவர் இட்ட "யார்க்கர்".
'முதுகெலும்பு அற்றவர்' 'எலும்பு சிகிச்சை நிபுணர்' என ஹச்.ராஜாவுடனான சர்ச்சைகளுக்கு பின் கமலின் சத்தம் குறைய ஆரம்பித்ததற்கு காரணம் பிஜேபி அல்ல, அது 'வேறொன்று'.சமூக பிரச்சனைகள் எதையும் பேசாமல் ஊழலை ஒழிப்பேன் என வெகுஜன மக்களை திசை திருப்புவதற்கும் அது தான் காரணம்.
........
நன்கு தெரிந்த ஐயங்கார் நண்பர் அவர். ஜெயலலிதா 69% இடஒதுக்கீடு நேரமும், சங்கராச்சாரியாரின் கைது நேரமும், ஜெயாவை கடுமையாக சாடியவர். ஆனால், ஜெயா மரிக்கும் வரை அவருக்கு தான் ஓட்டு இட்டார். காரணம் 'அது'.
உடனடியாக காவி ஆட்சி தமிழகத்தில் வந்திடாது. ஆனால், இந்தியா-தமிழ் இரண்டையும் சமநிலையில் கொண்டு போகும் ஆள் 'அதற்க்கு' தேவை. அதற்க்கான தற்போதைய துருப்பு சீட்டு தான் கமல்.
சரி அது என்ன 'அது' என கேட்கிறீர்களா? புத்தனையும், அம்பேத்கரையும், ஐயா வைகுண்டரையும் உள்வாங்கியிருக்கும் அதன் பெயர் 'பிராமணியம்'.
அது கமலையும் தின்று செரிக்கும்.
நாம், நாம் வழக்கம் போல சாதி மைதானத்தில் நடக்கும் போட்டியை வேடிக்கை பார்ப்போம்..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155970919917780

தென் திருவாங்கூர் -குறிப்புகள்

பழைய திருவாங்கூரில் மிசனரிகளுக்கும், திருவாங்கூர் அரசுக்கு ஆதரவளித்த திருவாங்கூர் பிரிட்டிஷ் ரெசிடண்டுகளுக்குமான உறவு சுவாரசியமானது. தீவிரமாக தமது மதத்தை பரவ செய்யும் முனைவில் மிசனரிகள் ஒரு பக்கம் இருக்க, அந்த மதம் மாறியவர்களை எப்படி தங்கள் அரசியல் லாபிக்காக உபயோகிக்கலாம் என பிரிட்டிஷார் முயன்றது இன்னொரு பக்க அரசியல்.
ஆர்எஸ்எஸ் அன்பர்கள் தான் இந்த கருத்தில், 'ஆங்கிலேயர்களையும், மிசனரிகளையும்' ஒரே முடிச்சு இட்டு தான் விவாதிப்பார்கள் என்றால், தீவிர கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் பெரும்பாலும் அதே கருத்தையே நம்பி வருகிறார்கள்.
சரி, இனி வரலாறு..
திருவாங்கூருக்கான முதல் மிசனரி றிங்கல்தோபே வந்த போது, அவருக்கான பல உதவிகளை செய்தது அன்றைய திருவாங்கூரின் பிரிட்டிஷ் ரெசிடண்டுகளான மேஜர் மெக்கலேவும், கர்னல் மன்றோவும் தான். 1858/1859 ல் கிறிஸ்தவ சாணார்(நாடார்)களுக்கும், நாயர்களுக்குமான சமூக அந்தஸ்து போட்டி தீவிரமாக வெடிக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே அனுமதிக்கபடாத கிறிஸ்தவ சாணார்களுக்கு உதவ மிசனரிகள் முன்வருகின்றனர். சாணார் முதலானோர் தோள்சீலை(litrally, its wearing blouse) அணிவது பண்பாட்டு சீரழிவு என்று உயர்சாதியினர் குமுறி பஞ்சாயத்து திருவாங்கூர் அரசவைக்கு போகிறது, பிறகு இங்கிலாந்து வரைக்கும்.
திருவாங்கூர் மிசனரிகள் இங்கிருந்த பிரிட்டிஷ் ரெசிடென்டான ஜெனரல் குல்லனின் உதவியை கேட்கின்றனர். அவரோ மறுக்கிறார்.. எந்த நாட்டின் உள்கலாச்சாரத்திலும் நாங்கள் தலையிட மாட்டோமென இங்கிலாத்தில் இருந்து அறிக்கை வர கிறிஸ்தவ சாணார்கள் அந்த முயற்சியில் தோற்கிறார்கள்.
பிரிட்டிஷார் அதிகமாக மதநம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுகிறார்கள் என்று அவதானித்த மிசனரி ஜேம்ஸ் டாவ்சன் திருவாங்கூரில் பணிபுரியும் வாய்ப்பை மறுத்தது இன்னொரு பக்க வரலாறு..
.......................
வரலாற்றை ப்ளாக் & வைட்டா பார்க்காம ஆரோக்கியமா விவாதிச்சா தொடர்ந்து பேசலாம் மக்கா...

குளச்சல் போர்

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் திருவாங்கூரை படையெடுக்கும் எண்ணத்துடன் டச்சு கப்பல் ஒன்று குளச்சல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஒற்றர்கள் வழி தகவலை அறிந்த திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா, தனது தளபதியை அழைத்து படை திரட்ட சொல்கிறார்.
திருவாங்கூர் படையில் இருந்த மீனவ வீரர்களும், உள்நாட்டின் களரி ஆசான்களும் குளச்சலில் அணி வகுக்கிறார்கள். உள்ளூரில் வளர்ந்த நீண்ட பனை மரங்கள் வெட்டப்பட்டு குளச்சல் கடல் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. பனம் தடிகள், பீரங்கிகள் போல நிறுத்தப்பட்டுகின்றன.
குளச்சலை நெருங்கும் டச்சுப்படை, கடற்கரையில் இருப்பது பனை தடிகள் என அறியாமல் திகைத்து போய் கப்பலை நிறுத்தி நங்கூரம் இடுகிறார்கள். சூழ்நிலையை புரிந்துக்கொண்ட மீனவ அணி, கடலில் முங்கி போய், கப்பலில் ஓட்டை இடுகிறார்கள். கப்பலில் தண்ணீர் ஏறி கப்பல் சரிய, உள்ளூர் ஆசான்கள் படகில் வந்து டச்சு வீரர்களுடன் சண்டையிட்டு, வீழ்த்தி தளபதி டெலனாயை சிறை பிடிக்கிறார்கள்.. இந்த சண்டைக்கு தலைமை தாங்கிய XXXXXXX அரசரின் கைகளால் பட்டையம் பெறுகிறார்....
.......................
கேட்க்கும் போதே சிலிர்ப்பாக இருக்கிறது இல்லையா? சுயசாதி பெருமையை நிலைநிறுத்த, பொய்யும் புரட்டும் சேர்த்து இன்றைய வரலாறுகள் இப்பிடி தான் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிறன.
உண்மையில் "குளச்சல் போர்" என்று ஒன்று கடலில் நடக்கவே இல்லை. டச்சு வீரர்கள் சாவகாசமாக இறங்கி அரண் அமைத்து போர் தொடுத்தார்கள். இன்று "முதல் சுதந்திர போர்" என #சிலர்# வருணிக்கும் இந்த போரில், ஐரோப்பிய வீரர்களும் திருவாங்கூர் படையில் இருந்தார்கள் என்பது ஒரு வேடிக்கையான வரலாறு.
.......
நான் சிறுவனாக இருந்த போது, இந்த கதையில் இன்னொரு கிளை கதையும் சொல்லப்பட்டு வந்தது. 'மார்த்தாண்டவர்மா மந்திரவாதிகளை வைத்து மந்திரம் செய்து, வண்டுகளை பறக்க செய்து, அது டச்சு படைகளை தாக்கி அவர்களை நிலை குலைய வைத்தது' என அந்த கதை நீளும்.. 
இந்த நவீன காலத்தில் மந்திரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அந்த கதை பகுதியை தறித்து விட்டு இன்று "ஆனந்தமாய்" குளச்சல் போர் குறித்து இன்னொரு கதையை பரப்பி வருகிறார்கள்.. பாவமாய் இருக்கிறது. 😁
2

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155953682537780
...............
குளச்சல் போர் - தொடரும் விவாதம்..
ஒன்றை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த சமூக, வரலாற்று பின்புலத்தில் நீங்கள் நின்று விவாதிக்கிறீர்களோ, அதே வரலாற்று சங்கிலியில் நானும் ஒரு கண்ணியே..
"திருவாங்கூர் கோயில் பொக்கிஷங்கள் அனைத்தும் அரசாண்ட எங்கள் முன்னோர்களிடமிருந்து திருடப்பட்டது" என்பது உங்கள் பார்வை என்றால், "திருவாங்கூர் கோயில் பொக்கிஷங்கள் எங்கள் முன்னோர்களின் மீது திணிக்கப்பட்ட கடும் வரிகள் மூலம் உருவானது" என்பது எனது பார்வை. இரண்டிற்குமான வித்தியாசத்தை புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து, குளச்சல் போர் நடந்ததாக கூறப்படும் காலட்டத்தில் திருவாங்கூர் அரசு ஆங்கிலேயே நாட்காட்டி முறைகளை பின்பற்றவே இல்லை. 'குளச்சல் போர் ஜூலை 31 1741 அன்று முடிந்தது' என இன்று நீங்கள் வைக்கும் தரவுகள் கூட, ஆங்கிலேய அரசு கடிதங்கள் வழி கிடைப்பவை ( கவனிக்க டச்சு அரசு கடிதங்கள் அல்ல.).
மீண்டும்......... இந்த வரலாற்றில் உங்களை போல நானும் ஒரு பகுதியே. 'பனம் தடி அடுக்கி, பீரங்கி பாவனை காட்டிய' வரலாறுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு, அவர்கள் நம்மை எள்ளி நகையாடிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன்..
கலங்கி தான் தெளிய வேண்டுமென்றால், வாருங்கள் கலங்கி தெளிவோம். யாரையும் காயப்படுத்தாமல் உரையாடுவோம்.
3

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155959899032780

தோள்சீலை கலகம் - திருவாங்கூர் - நாடார்கள் - திராவிட அரசியல் - சில வரலாற்று கற்பிதங்கள்

கற்பிதம் 1: இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் நாடார்கள்.
பதில்: தவறு. இந்த புகைப்படம் மட்டுமில்லை, இணையத்தில் "நாடார் பெண்கள்" என பகிரப்படும் மார்பு கச்சை அணியாமல் இருக்கும் பெருவாரியான பெண்களின் புகைப்படங்கள், இலங்கையின் ரோடியா சமூக மக்களின் புகைப்படங்கள்.
கற்பிதம் 2: நாடார்களுக்கு மார்பு துணி அணிய உரிமை வாங்கி கொடுத்தது திராவிட அரசியல்.
பதில்: தவறு. ஐயா வைகுண்டரின் தொடர்ச்சியான சுயமரியாதை பரப்புதல்களும், கிறிஸ்தவ மிசனரிகளின் பணிகளும், மக்களின் தொடர் போராட்டங்களுமே மார்பு துணி அணியும் உரிமையை பெற்றுக் கொடுத்தது..




...................
முந்தைய கற்பிதத்தை தொடரும் கேள்விகள்.
கேள்வி 1: நாடார் பெண்கள் மார்பை மறைக்க அனுமதிக்கபட்டார்களா?
அனுமதிக்கப்படவில்லை.
மார்பை மறைக்காமல் இருப்பது ஒரு காலகட்டத்தில் சமூக இயல்பாகவே இருந்துள்ளது. சமூகத்தில் மேன்மக்களாக கருதப்பட்ட உயர்சாதியின பெண்கள், தங்கள் மார்புகளை மறைத்து உடுத்த, அது 'மேன்மக்கள் ஆகி வரும்' அடுத்த நிலை சாதிகளுக்கும் அந்த பழக்கம் பரவுகிறது. ஆக, தன் சமூக பெண்களை போல எப்படி ஒரு தாழ்ந்த பெண்களும் மார்பை மறைக்கலாம் என்ற ஆண்டகைகளின் கோபம், கீழே உள்ள சமூகத்தை நோக்கி திரும்ப.. இயல்பாக இருந்த ஒரு சமூக பழக்கம் கட்டாயமாக்கப்பட தொடங்குகிறது. இந்த புள்ளியில் தான் ஐயா வைகுண்டரும், கிறிஸ்தவ மிசனாரிகளும் வருகிறார்கள். அதை தொடர்ந்து நிகழ்ந்தது அனைத்தும் மெய்கூச்சரியும் வரலாறு.
குமரி கோயிலுக்கு வந்த விவேகானந்தர், அங்கு இருந்த பெண்களை பார்த்து சொன்ன வாக்கியம் "பைத்தியக்காரர்களின் நாடு".. அங்கே மார்பு மறைக்காமல் இருந்த பெண்கள் நாடார்கள் அல்ல, நாயர்கள். ஆக, திருவாங்கூரின் பெருவாரியான இன பெண்களுக்கு நிகழ்ந்த வரலாற்று துயரம் இது.
                                                                 (நாயர் சமூக பெண்)

கவனிக்க, இங்கே நாயர் பெண்கள் நம்பூதிரிகளுக்கு முன்பும், கோயில்களிலும் தான் மார்பை மறைக்க அனுமதிக்கப்படவில்லை, பொதுவில் கச்சை அணிய அவர்களுக்கு உரிமை இருந்தது.


                                                               (நாயர் சமூக பெண்கள்)


கேள்வி 2: நாடார்களுக்கு திராவிட அரசியலின் பங்களிப்பு என்ன?
இந்தியாவுக்கு மதம் பரப்ப வந்த மிசனரிகள் எங்கெல்லாம் பலமாக இருந்தார்களோ, அங்கெல்லாம் பள்ளிக்கூடங்கள் கட்ட துவங்கினார்கள். தமிழகத்தில் குமரியும், இந்தியாவில் கேரளாவும் கல்வியில் ஏன் இவளவு முன்னணியில் இருக்கிறார்கள் என்பதன் பின்னணி இது தான்.
ஆக, மிசனரிகளின் நேரடி பழக்கத்தாலும், கல்வியாலும் முன்னேறி சென்ற ஒரு நாடார்தலைமுறை பெரும்செல்வம் சேர்த்து 'உயர்சமூகம்' ஆகி விட, மிசனரிகளின் நேரடி பழக்கமில்லாமல், அவர்கள் கொடுத்த கல்வி மட்டுமே கிடைத்த ஒரு தலைமுறை உருவானது. அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது திராவிட இயக்கமும், இட ஒதுக்கீடும்.
குமரி-தமிழ்நாடு இணைப்பின் போது காமராசர், "தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட குமரி வளர்ச்சி அடைந்த பகுதியாக இருக்கிறது. எனவே உங்கள் பகுதிக்கு எங்களால் அதிகமாக உதவ முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் கேரளாவுடன் இணைந்துக்கொள்ளுங்கள்" என்றார்.
ஒரு தேர்ந்த சமூக அரசியலை புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி உரையாற்றியிருக்க முடியும். இதையும் "காமராசர் கேரளாவோடு போக சொல்லி விட்டார், குமரி கிறிஸ்தவர்களை அவருக்கு பிடிக்கவில்லை...... " என இன்றும் அவருக்கு எதிராக சடைபின்னிக் கொண்டிருக்கிறார்கள் சில கிறிஸ்தவ அறிவிலிகள்.
....................
சமூக நீதியை விரும்பும் குமரியை சார்ந்த புதிய தலைமுறைக்கும் நான் இப்போதைக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்... "சான்றோர் தான் சாணான் ஆயிற்று..... மூவேந்தர்களின் நேரடி வாரிசுகள் நாங்கள்..... " என்பது போன்ற கற்பிதங்களை உதறித் தள்ளுங்கள். இது போன்ற வீண் பிம்பங்கள் மருந்துக்கு கூட உங்கள் முன்னேற்றத்திற்கு உதவ போவது இல்லை.
#Travancore
#திருவாங்கூர்
16/09/2017
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155947188602780

ஊர் பயணம் - 10 அவதானிப்புகள் (2017)

ஊர் பயணம் - 10 அவதானிப்புகள் (2017)
..........................................................................
1) சென்ற வருடம் எம்பிஎம்பி குதிக்க வைத்த சாலைகள் இந்தமுறை வழுக்கிக் கொண்டு போகிறது. ஆங்காங்கே மேம்பால வேலைகள் சற்று சிரமத்தை கொடுத்தாலும், மக்களின் முணுமுணுப்பு குறைந்திருக்கிறது.
2) பொன்.ராதாகிருஷ்ணனை குமரியின் ஐக்கானாக மாற்றும் வேலையை ஒரு குழு தீவிரமாக செய்து வருகிறது.. குறிப்பாக குமரி கிறிஸ்தவர்களிடம்.
3) குமரி கிறிஸ்தவ நாடார்களை ஒருபக்கம் ஒருங்கிணைத்து, இன்னொரு பக்கம் குமரி கிறிஸ்தவ மீனவர்களை நிற்க வைக்கும் வேலைகள் சிறப்பாக நடக்கிறது. அதற்க்கான உச்சபட்ச ஆயுதம் தான் 'இனையம் சரக்கு பெட்டக' துறைமுகம். இந்திய ராணுவத்தின் உளவு தடவாளமாக இந்த பகுதியை மாற்றப்போகிறார்கள் என்ற செய்தியும் காற்றில் பரவுகிறது.
4) சாதி இன்னும் அதே இறுக்கத்துடன் தான் இருக்கிறது. பேச்சுகளில் அதே "#### பயலுவளும்" "ஏமான்" களும் சரளமாக விழுகிறது.
5) சந்தேகமே இல்லாமல், பெருவாரியான நடுத்தரவர்க்க சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் 'நவபார்பனர்களாக' மாறி இருக்கிறார்கள். "நீட்டு" வேண்டும் என சொல்லுபவர்களை கூட மன்னித்து விடலாம், "இட ஒதுக்கீடு" எதுக்கு என கேட்பவர்களை அப்படியே கடித்து தின்று விடலாம் போல உள்ளது. மேல்நடுத்தர சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் 'பார்பனர்களாக' மாறி இரண்டு தசமங்கள் ஆகின்றன.
6) மதநம்பிக்கை வீழ்ச்சிகளை சந்திக்கிறது என்பதை புரிந்துக்கொண்டார்களோ என்னவோ பெருவாரியான கிறிஸ்தவ கோயில் குருமார்கள் "வட்டி கடை" துவங்குவதிலும், "திருமண மண்டபங்கள்" துவங்குவதிலும் பிசியாக இருக்கிறார்கள். மருந்துக்கு கூட கல்வி நிலையங்கள் துவங்க இவர்களுக்கு மனது வருவதில்லை.
7) புத்தக வாசிப்பு இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ, இன்றும் அப்படியே இருக்கிறது. நான்கு எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டாலும் எண்ணி இருபது பேர் வருகிறார்கள்.
8) மாலை மூன்று மணிக்கும் அதே ருசியோடு பிரபு ஹோட்டலில் சிக்கன் பிரியாணி கிடைக்கிறது. ஆஸாத், பரோட்டா விசயத்திலும் இம்முறை ஏமாற்றி விட்டது. இரண்டையும் ஒப்பிடும் போது, அக்க்ஷயாவில் பிரியாணி விலை குறைவு, தரமும் 'பரவாயில்லை' ரகம்.
9) குன்னம்பாறையில் (இரவிப்புதூர் கடையில் இருந்து மூன்று கி.மீ) இன்றும் பரோட்டா மூன்று ரூபாய்க்கும், பீப் பதினைந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது. முப்பது ரூபாய்க்கு இப்படி நிறைவாக புரோட்டா, பீப் குமரியில் வேறு எங்கேனும் விற்பார்களா என்பது சந்தேகமே.
10) ஸ்பிரிட் சேர்க்காத சாராயம் கிடைக்கிறது... 



12/09/2017


https://www.facebook.com/stalin.felix.5/posts/10155937289192780

Thursday, February 9, 2017

சசிகலா மீது ஏன் இந்த வெறுப்பு? - அந்த 8 காரணங்கள்

ஒப்பீட்டளவில் இன்றைய அதிமுக என்பது கருணாநிதி எதிர்ப்பின் ஒரு திரட்சியான வடிவமே. அம்மையாரின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலையில், தமிழக மக்களோ 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக்கொள்ளி' என தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அம்மையார் இடத்தில் யாரையுமே நினைத்துப்பார்க்க முடியாத அதிமுக தொண்டர்கள், ஓபிஎஸ் க்காக கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். அம்மையாரின் ஒவ்வொரு அரசியல் அசைவிலும் முப்பத்தி மூன்று ஆண்டுகளாக உடனிருந்த சசிகலா மீது மக்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?

1) சாவை தொடரும் மர்மம்

 செப்டம்பர் 22 ம் தேதி மருத்துவமனையில்,'நீர் சத்து குறைவு' என அம்மையார் அனுமதிக்கப்பட்ட பிறகு நடந்த எல்லா விடயங்களுமே சாமானியனுக்கு மர்ம்மமாகவே இருக்கிறது. இடையிடையே இந்த சந்தேகங்களை சமூகவலைத்தளங்கள் வழி கேட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5 ம் தேதி வரை, அவர் நன்றாக இருக்கிறார், உணவருத்துகிறார் என்றே மக்களுக்கு நம்பவைக்கப்பட்டது. அம்மையாரின் ஒரு புகைப்படம் கூட வெளியே வராமல் பார்த்துக்கொண்ட சசிகலாவை மக்கள் சந்தேக கண்ணோடு நோக்குவது இயல்பானதே.

2) சசிகலாவின் ஒப்பனை
தமிழர்களுக்கு ஒரு பொதுவான குணம் உண்டு. தனக்கு அபிமானமான நடிகரையோ, தலைவரையோ பிரதி எடுப்பவர்களை அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. எம்ஜியாராக முயற்சி செய்து தோற்றுப்போன மு.க முத்து, இதற்கு சமகால உதாரணம். அம்மையார் மரணமடைந்த ஒரேவாரத்தில், புடவை-ஜாக்கெட்-கொண்டை- மேக்கப் என சசிகலா மாற்றிக் கொண்டதை யாரும் ரசிக்கவில்லை. கூடவே அம்மையார் போல பேச முயலும் மேனரிசமும் மக்களுக்கு எரிச்சலையே தந்தது.

3) ஊழல் குற்றச்சாட்டுகள்

சசியின் மீது இருக்கும் வழக்குகளுக்கு சம பங்கு அம்மையாருக்கு உண்டு என்றாலும் சாமர்த்தியமாக அது சசிக்காக மட்டுமே நடந்தது போன்ற உளவியல் தாக்குதலுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டார்கள். போதாததற்கு, 'எனக்கு யாருமே இல்லை, மக்களுக்காக நான்.. ' போன்ற வசனங்கள், ஜெயாவை 'யாருமற்றவர்' என்ற பிம்ப உருவாக்கத்துக்கு கொண்டு சென்றது. திமுக எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்க்காக, அம்மையாரை 'ஊழல் குற்றச்சாட்டில்' இருந்து மறைத்தவர்களின் கனிவு சசிகலாவுக்கு கிடைக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் இருந்து வெளிய வந்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துக்கொள்ளலாம் என்ற பொறுமை சசிகலாவுக்கு இல்லாததால், அவர்மீதான வெறுப்பு, மக்களுக்கு இன்னும் அதிகமானது.



4) ஒன்று கூடிய மன்னார்குடி மாபியா

மன்னார்குடி கும்பலில், தினகரன் துவங்கி யாரையெல்லாம் அம்மையார் துரத்தி அடித்தாரோ, அவர்களை எல்லாம் அம்மையார் மரணம் அறிவிக்கப்பட்ட ஒரே இராப்பொழுதில் ஒன்று கூடினார்கள். அதுவும் ஜெயாவின் உடல்வைக்கபட்டிருந்த மேடை முழுவதையும் ஆக்கிரமித்ததை பார்த்த மக்கள் கோபத்தின் உச்சிக்கே போனார்கள்.

5) சசி VS ஜெயலலிதா - ஆளுமை

பொதுசெயலாளராக அறிவிக்கப்பட்ட பின், இந்தியா டுடே நிகழ்வில் கலந்துக்கொண்ட சசி அங்கேயே அம்பலப்பட்டுப்போனார். 'தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சியான விஷயம்' என அவர் அளித்த முதல் பேட்டி, மக்களுக்கு ஷாக் அடித்தால்போல் ஆயிற்று. வேட்பாளர்கள் தேர்வில் சசிகலா கும்பலில் தலையீடு இருந்தது என்பது முதலமைச்சர் பதவில் உட்காரும் தகுதி ஆகாது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில், அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, தனிநபராக சட்டமன்றத்துக்கு வந்தது எல்லாம், அம்மையார் கிரவுண்டுக்கு வெளியே அடித்த சிக்சர்கள். அதையெல்லாம் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு சசிகலா வேப்பங்காயாக தெரிவது வியப்பல்ல.

6) தேர்தலை சந்திக்காத முகம்

குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலராக கூட மக்களால் தெரிந்தெடுக்கப்படாத ஒருவர், எப்படி முதலமைச்சர் ஆகலாம் என்ற மக்களின் ஆதங்கம் வெகு இயல்பான ஒன்றே. தமிழக அரசியலில் சாதித்தவர்கள் அனைவருமே மக்கள் பணி செய்து வந்தவர்களே. ஏன், கடந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் கூட, பல உதவிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம்பிடித்து அரசியலுக்கு வந்தவர் தான். அரசியலுக்கு சம்மந்தமே இல்லாத புதிய முகங்களை ஏற்றுகொள்ள தயங்கும் மக்கள் உளவியலை இதன் மூலம் நாம் புரிந்துக்கொள்ளலாம்.


7) விசிறி அடிக்கப்பட்ட ஓபிஎஸ்

ஏற்கனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அனுபவம், சாந்தமான முகம், அடக்கமான பேச்சு, பத்திரிக்கையாளர்களுடன் அவரது இணக்கமான போக்கு எல்லாம், அவரது மைனசை(ஜல்லிக்கட்டு விவகாரம்,ரெட்டியுடனான நட்பு)தாண்டி மக்கள் மனதில் ஸ்கோர் செய்ய வைத்தது. அம்மையாரால் இரண்டுமுறை சுட்டிக்காட்டப்பட்ட ஓபிஎஸ் ஐ, இரண்டே மாதத்தில் தூக்கி அடித்ததை மக்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. 



8) ஜெயலலிதா

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், அதுவும் உண்மை. தொண்ணூறுகளுக்கு பிறகு, கலைஞரையும், அம்மையாரையும் வேறு வழியே இல்லாமல் தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இருவருக்குமே நொறுங்கிய தோல்விகளையும் பரிசாக தந்தார்கள். இருவரும் புனிதர்கள் அல்ல என்பது மக்கள் மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இவரை விட்டால் அவர், அவரை விட்டால் இவர் என வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டிருந்த மக்கள், அம்மையாரின் மறைவுக்கு பிறகு,சசிகலா அதிகாரத்துக்கு வந்தால், இன்னொரு ஜெயலலிதாவாகி இன்னும் இருபது வருடம் நம்மை படுத்தி எடுத்து விடுவார் என்ற இயல்பான அச்சம் கூட இந்த எதிர்ப்புக்கு ஒரு காரணமே..

பிறகு: இது என்னுடைய பார்வை மட்டுமே, உங்களுடைய பார்வையை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.